புதன், 11 அக்டோபர், 2017

மூளையின் நெசவுத் தொழிற்சாலை

நான் எதற்காக கவிதை வாசிக்கிறேன் என்ற கேள்வியிலிருந்து  ஆரம்பிக்கலாம், எனக்கு கவிதை ஒரு போதை வஸ்து. அதற்கு மேல் அதற்கிருக்கும் தேவையெல்லாம் எல்லாக் கலைவடிவங்களுக்குமிருக்கும் வேலை தான். கூவிக் கூவிப்  பிரச்சாரம் செய்வது, மண்டையை உடைத்தால் தான் திறக்கமுடியும் என்பது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குவது போன்று இன்னுமின்னும் பல வேலைகள் உண்டு. அதெல்லாம் தேவையான வேலை தான். இருந்தாலும் கவிதை,  போதை மயக்கமாய் மட்டுமே நிகழ வேண்டியது. அது வெறுங் காலையில்  தானே மலரும் சிரிப்பாகவிருக்கும். இல்லை,  துயரத்தின் படிக்கட்டருகே புகைந்து மிதக்கும் முகங்களாயுமிருக்கும்.  எல்லாக் கலைவடிவங்களையும் போல மனிதர் கொண்டாட  நிகழ்ந்தது தான் இந்த மொழியின் கொண்டாட்டமும்.  ஆகாவே கவிதை  போதையாயிருக்கிறது.








ஏதோவொரு திருப்பத்தில் நின்று பிளேன் - டீ குடித்தபடி சுகுமாரன் கையைக் காட்டி மச்சான்,

"சொல்லித் தந்ததோ
கற்றுக் கொண்டதோ போல இல்லை
வாழ்க்கை - அது
குழந்தைக் கதையில் மந்திரவாதி எங்கோ ஒளித்து வைத்த
உயிர்"

என்று சொல்லிவிட்டு புன்னகைக்கிறார். நான் உடனே, என்ன மச்சான் செய்வது? இந்த வாழ்க்கை நம்முன் கற்களால் எழும்புகிறது. அதனாலென்ன ஆழக் கிணற்றின் அடியாழத்தில் நமக்குள் தானே கதவுகளில்லை என்றேன். போடா விசரா,

"இப்போது அன்பு -
ஊதாரிப் பிள்ளை வீடு திரும்பக் காத்திருக்கும்
கருணையோ
சாகாதபிடிகடுகுக்காய் நடந்த
ஆற்றாமையோ
தொட்டில் இல்லாமல் வந்த குழந்தைக்கு
சவப்பெட்டி வாங்கக் காசில்லாத
தவிப்போ அல்ல "

இப்போது அன்பு -
சவரக்கத்தியின் பளபளக்கும் கூர்முனை "

என்றார். அடப்போடா பிளேன்டீயை கையில் வைத்தபடியே பீடியொன்றை எடுத்து பற்ற வைத்தேன். வாகனத்திலிருந்து இறங்கி வந்த ஹமீதிடம் உங்களின் கால்களின் ஆல்பம் படித்தேன். உருக்கமாக இருந்தது, ஆனால் கொஞ்சம் நீண்டு விட்டது என்றேன். கவிதையிலிருந்ததை  விடவும் அதிகமான கால்களை நான் பார்த்திருக்கிறேன். நான் எப்பொழுதும் கால்களையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆகவே கொஞ்சம் நீண்டு விட்டது. அதனாலென்ன இப்போது, நமக்குத் தான் இன்னும் நேரமிருக்கிறதே என்றார். சரி மச்சான் நீங்கள் கதைச்சுக்கொண்டிருங்கோ, எங்கட ஊர்ப் பெடியன் ஒருத்தன் நிக்கிறான். அவன் தவறணைக்குப் போயிருப்பான் கூட்டிக்கொண்டு வாறன்  என்று சொல்லிவிட்டுப் போனான். கவிதை எழுதிய தொண்னூறு வீதம் பேர் அங்கிருந்து குடித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவர் முகத்தில் இன்னொருவர் ஓங்கிக்குத்துவார். இரத்தம் வழியும், உதாரணத்திற்கு, கணியன் பூங்குன்றனார் கள்ளுக்குடித்துக்கொண்டிருந்த அவ்வையாரின் முகத்தில் குத்திவிடுவார். மனுஷியை நிப்பாட்டேலாது. பிறகு  அன்னா அக்மதேவா ஒருபக்கம் நிண்டு இழுக்க இன்னொரு பக்கம் பாரதி மச்சான் இழுத்துக்கொண்டு நிற்பான். இதற்கிடையில் நட்சத்திரன் செவ்விந்தியனின் நாஸ்டால்ஜியாப் படகில் எல்லோரும் வந்து நாம் முன்னரிருந்த ஆற்றங்கரையில் புற்களுக்கும் காய்ந்த இலைகளுக்கும் உதிர்ந்த மலர்களுக்கும் மேலே உருண்டு புரண்டு சிரிப்பார்கள்.         

"பகலில்,
ஒரு பீடி இழுக்கிறதைப் போல
எல்லாம் செய்யலாம் போலுள்ளது" என்று நட்சத்திரன் சொன்னான். எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

பிறகு எங்கிருந்தோ வந்த ஆண்டாளும் இணைந்து கொண்டாள். ஆண்டாளுக்கு குடிப்பழக்கம் இல்லை. கண்ணன் தான் போதையே. காதலும் காமமும் ஏற ஏற மொழியைக் குழைத்து மாலை நேரத்துக்கான போதையை அவள் செய்வாள்.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

நாங்கள் கிறங்கிக் கேட்டுவிட்டு பாரதியைப் பார்த்தோம். பேயா, இங்க பார் அவள் எப்பிடி எழுதியிருக்கிறாள் என்று. நீயும் எழுதியிருக்கிறியே. எங்க ஒண்டு சொல்லு பார்ப்பம் என்றோம்.

உடனே மெல்லக் கம்மிவிட்டு பாடத் தொடங்கினான். திறமான பாட்டுக்காரன்.

"ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ"

அடேய் வரியில கொஞ்சமும் அந்த சங்கீதத்தில் மிச்சமும் இருக்கு, ஆனா இது அவ்வளவு தேறாது என்றேன். போடா லூசா உனக்கு எல்லாம் இப்பிடித்தான் என்று கெக்கட்டம் போட்டுச் சிரிச்சான். உடனே ஹமீது சொன்னான்,

'
வேறொன்றும் வேண்டியதில்லை

கொஞ்சம் சோறு
கொஞ்சம் சுதந்திரம்
கொஞ்சம் தைரியம்

வேறொன்றும் வேண்டியதில்லை

இவர்களிடமெல்லாம்
எதையும் நிரூபிக்காமல்
முழுப் பைத்தியமாக வாழலாம் "

மச்சான், இவங்களுக்கு சொல்லிச் சொல்லி மாளாது நாங்கள் கொஞ்சம் நடந்துவிட்டு வருவமா என்று பாரதியைக் கேட்டான். சரி மச்சான் போவம் என்று ஹமீதின் வண்டியைத் தள்ளியபடி பாரதி போனான். பின்னேரத்துக்கும் இரவுக்குமிடையில் நட்சத்திரங்கள் தெரியத் தொடங்கின.

போனார்கள் இரவுணவுக்குத் திருப்பினார்கள். நானும் கணியனும் நாச்சியாரும் சேர்ந்து விறகுகளை எடுத்து வந்து அடுக்கினோம். பட்டினத்தார் போய் தீப்பெட்டியெடுத்துக்கொண்டு வந்து கொழுத்தினார். தீ மூண்டெரிந்தது. காட்டுக்குப் பக்கமாயிருந்த குடிசைகள் என்பதால் கொஞ்சம் குளிர் கூட. நடுங்கிக் கொண்டிருந்த தீச் சுடர் போல் கண்களெரிய பாரதி கஞ்சா புகைத்துக்கொண்டிருந்தான். புகை, சுற்றி மிதந்து இடமெங்கும் போதை இருட்டைப்போல ஆகியது. எனக்குத்தெரிந்து போதைக்கெதிரான கவிஞர்கள் இந்த மானுடவரலாற்றிலேயே கிடையாது என்று தான் நினைக்கிறேன்.





நித்திய போதை, அதுவொன்று தான் எங்களை வாழ வைக்கிறதென்று நம்பினோம்.

எங்கேயோ போன எஸ் போஸ் கோபமாக திரும்பி வந்திருந்தான். கவிதையெழுதும் கொப்பியைத் தூக்கிப் போட்டான். இவங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்குதில்லை மச்சான். சாத்தானுக்கும் தேவனுக்கும் வித்தியாசம் தெரியாமல் நிக்கிறாங்கள், என்று கத்தினான். புகையை நன்றாக உள்ளே இழுத்து தொண்டையில் மெல்லிய நோவுடன் புகை போவதை ரசித்துக்கொண்டு திரும்பிய பாரதி. நீ என்ன மச்சான் சொல்லுறாய் நானும் இவங்கள நம்பித்தான் பத்தாயிரம் புத்தகம் அடிச்சு வெளியிடலாம் என்று நினைச்சன். கடைசி வரைக்கும் சோத்துக்கு வழியில்லாமல் அலைஞ்சது தான் மிச்சம் என்று கஞ்சா அடித்த ஆத்தலில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பாரதி உளற ஆரம்பித்தான்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருளின் உலகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். இருட்டில் ஆடும் மரங்கள். மிதந்து செல்லும் ஆறு. அலைகளின் வெண் வரி. சிறிது நேரத்தின் பின்  ரமேஷ் - பிரேம் நிற்க, அழுதுகொண்டிருந்த பாரதி, மெல்லிய இடைவெளிவிட்டு," திரும்பச் சொல்லுங்க டா அந்த வரிகளை" என்றான்.

உன்னைக் கொல்ல
எனக்குப் பல வழிகள் தெரியும்
இருந்தாலும் எனக்குப்
பிடித்த வழி
உன் முன்னே என்னைப்
பிணமாகக் கிடத்துவது.””

*

கையில் பிளேன் டீ க்ளாஸ்களைக் கொண்டு மாணிக்கவாசகர்  வந்தான். மச்சான் இரு இரு என்று கையைப்பிடித்து இழுத்த கம்பன், மச்சான் அந்த பாட்ட ஒருக்கா சொல்லிக்காட்டடா என்றான். உனக்கு இதே வேலையாய் போச்சு என்று சலித்தபடியே  பிளேன்டீயை கொடுத்தபடி சொல்லத் தொடங்கினான் மாணிக்கம்,

"முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதனென்(று) அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்"

... என்ற படி போனான். எங்கேயோ சுற்றிக்கொண்டிருந்த விக்கிரமாதித்யனும் தேவதேவனும் வந்து சேர்ந்தார்கள்.

தேவதேவன் கண்கள் புன்னகைக்க எல்லாவற்றையும் பற்றி உருகிக்கொண்டிருந்தான். பிறகு அந்தப் பறந்து போகாத இரண்டு வண்டுகளை பற்றி கதைத்தான். அதை ஏதோ A ஜோக் கேட்டது போன்று யாரோ சிரிக்கத் தொடங்கினார்கள். பிறகு விக்கிரமாதித்தியனை தனியே ரோட்டில் விட்டுவிடு போவதற்கு தான் பயந்ததை பற்றிச் சொன்னான். நிறை வெறியிலிருந்தரை கூட்டி வர குமரகுருபரனையும் இன்னும் சில இளம் கவிஞர்களையும் கூட்டி வர போவதற்கு முன் தான் இது நடந்திருக்கிறது.

அந்தக் கவிதையைச் சொன்னான்.

ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை

ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்

கர்ப்பிணிபெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே

ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்
போவேன்

*

இப்படியேன் உளறிக்கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்றால், இந்தப் பைத்தியக்காரர்கள் எழுதுவதைத் தான் நான் கவிதையென்று உணர்கிறேன். இன்னும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். ஆனால் எல்லோரையும் வைத்து எழுதுவது கஷ்டமாகவிருக்கிறது. நீண்டுவிடும் ஆகவே இனி எழுத ஆரம்பித்த நோக்கத்தைப் பார்ப்போம்.

இமாம் அதனானையும் மச்சான் என்று தான் கூப்பிடுவேன். அவன் கவிதைப் புத்தகம் எழுதியிருக்கிறான். எல்லாமே ஒரு சின்ன ஐடியாவை வைத்து செய்திருக்கும் வேறு வேறு பிரதிகள். பிரதிக்குள்  கருத்தியல் எல்லாம் நன்றாகவிருக்கிறது ஆனால்  கவிதை என்று நான் வாசிப்பது கொடுக்கும், அனுபவங்களுக்கும் போதைக்கும் நெருங்கக் கூட முடியாத வித்தியாசமான வெளியில் நிற்கிறது அவன் எழுதுபவை.



என்ன செய்ய, நான் வாழும் உலகத்தைத் தான் மேலே சொல்லியிருக்கிறேனே, யோசித்துப் பாருங்கள் நாங்கள் யாருக்கெல்லாம் பிறகு தோன்றியிருக்கிறோம். நமது மச்சான்களும் மச்சிகளும் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பின் நாம் எழுதுவதென்றால் அவர்களைத் தாண்டி எழுதுவதென்றே நினைக்கிறேன். பாரதி மச்சானுக்கும் ஆண்டாள் மச்சிக்கும் இருந்த பிரச்சினை வேறு. நமது வேறு. ஆனால் கலையின் உணர்வு ஆழமானது தானே. அதனை எந்த வரிகளாலும் கொண்டு வர முடியவில்லை என்பது தான் மொழியின் மீது சத்தியமாக என்ற தொகுப்பின் மீதான எனது வாசிப்பு. 

மோக்லி பதிப்பகம் புத்தகத்தைக் கொன்று சடலத்தை விற்பனைக்கு வைத்திருக்கிறது. கவிதைகளில் எண்பது வீதமானவற்றில் ஏராளமான எழுத்துப்பிழைகள். கொஞ்சம் கூட அக்கறையில்லாத வடிவமைப்பு.

சரி, மச்சான்களும் மச்சிகளும் அழைக்கிறார்கள், நகரும் படகில்  செல்கிறேன். எனக்கு மூளையால் நெசவு செய்யும் கவிதைகளை ரசிக்கத் தெரியவில்லை. சடங்கில் தெறிக்கும் மந்திர உச்சாடனத்தை எழுதும் பைத்திய ஆவிகளுடன் தான் நான் வாழப்போகிறேன். என் டி ராஜ்குமார் மச்சான் வார்த்தைகளில் சொல்வதானால், " ஓதி எறிந்த சொற்களில்".

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

ஆழத்தில் மலர்ந்த தாமரைகள்

மாம்பழம் சந்தியிருந்து காலையில் ஐந்து முப்பதுக்கு வெளிக்கிட்டம். சைக்கிள் கொஞ்சம் லேசாத் தான் போனது. காதில் ஹெட் போன்களை நுழைத்து விட்டு அதிவேகப் பாடல்களால் உடம்பை நிறைத்தபடி ஏறக்குறைய முப்பத்தைந்து நிமிடத்தில் சாவகச்சேரி வந்தோம் நானும் மதுரனும். 



புதன், 13 செப்டம்பர், 2017

அருளினியன் ஒரு எழுத்தாளர் அல்ல




கோபமாயிருக்கும் பொழுது எழுதக் கூடாதென்று ஆயிரம் தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் கோபம் வருகிறது, என்ன செய்ய. அருளினியன் போன்ற முட்டாள்களுக்கு இங்கு என்ன நடக்கிறதென்றாவது தெரியுமா? இலங்கையில் நின்று கொண்டு அதன் ஜனாதிபதியிடம் தனக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு விட்டதென்று புலம்பியிருக்கும் இந்த முதுகெலும்பில்லாத போலி, அவரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்கிறார்.

சாதாரண மக்கள் ஜனாதிபதியைச் சந்திக்க நூறு நாளாவது தெருவில் குந்தியிருக்க வேண்டியிருக்கிறது, அதுவும் கூட நடப்பது அசாத்தியம். இங்கு எதற்கும் வக்கில்லாமல் இந்த மக்களின் துயரங்களுக்கும் இழப்புகளுக்கும் நீதி கேட்டு எழுத்தாளர்கள்  எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்ட அப்பாவி,  மைத்திரி பால சிரிசேனாவை ஜாலியாக சந்தித்து புத்தக கையளிப்பை நிகழ்த்தியிருக்கிறார். வாவ். இந்த நாட்டில் யாரின் கருத்து சுதந்திரத்தை யார் பாதுகாப்பது.

அருளினியனின் புத்தகத்திற்கெதிரான மிரட்டல்கள் கண்டிக்கப் பட வேண்டியது. ஆனால் அதனை அருளினியனே நியாயப்படுத்திவிட்டு சிரித்துக்கொண்டிருக்கிறார். தயவு செய்து இதுபோன்ற போலிகளை எழுத்தாளர்கள் என்று அடைப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அருளினியன், நீங்கள் சமர்ப்பணம் செய்திருப்பது போராளிகளுக்கு - சந்தித்து சிரிப்பது கொலைகாரர்களுடன், உங்களுக்கு ஏதாவது தகுதியிருக்கிறதென்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு நடந்த மிரட்டல்களைப் பற்றியும் அதற்கு எதிரான எனது கருத்துக்களையும் அண்மையில் நிகழ்ந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியிருந்தேன். ஆகவே இப்பொழுது உங்களின் கருத்துக்களுக்கெதிராகவும் பேசவேண்டியிருக்கிறது. இலங்கை ஒன்றும் அவ்வளவு ஜனநாயக நாடல்ல. மைத்திரி கருத்துசுதந்திரத்தை காப்பாற்றும் ' ஐயாவும்' அல்ல. நீங்கள் அவரை சந்தியுங்கள் புத்தகத்தை வெளியிடுங்கள் அது உங்களின் இஷ்டம். ஆனால் கருத்து சுதந்திரம் தேவை என்று நாங்கள் இங்கே தொண்டை கிழியக் கத்திக்கொண்டிருப்பது அதிகாரத்தின் வேட்டிக்குள் நின்றுகொண்டு எழுத்துவதற்கல்ல. இங்கு சாதியும் மதமும் பிரச்சினை தான், ஆனால் அதற்கெதிரான எங்களின் குரலென்பதை இதுவரை பாதுகாப்பது எங்களின் எழுத்துக்களே, அதற்காக தாக்கப்பட்டாலும் கூட அப்பம் சாப்பிட அலரிமாளிகைக்குச் செல்ல மாட்டோம். நீங்கள் செய்திருப்பது கருத்துக் சுதந்திரம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் குரலுக்காகவல்ல.

நீங்கள் செய்துகொண்டிருப்பதற்குப் பெயர் பொறுக்கித்தனம்.  

வியாழன், 20 ஜூலை, 2017

பிணமெரியும் வாசல்







புத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள  மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக்கு சென்றோம். தேநீர் தந்தார்கள். ஆற வைத்துவிட்டு, அங்கிருந்த தோழர்களோடு கதைத்தோம். ”இரவு பகலாக சுழற்சி முறையில் இருக்கின்றோம். ஒரு நேரத்தில் ஐம்பது தொடக்கம் அதிகம் ஐநூறு பேர்வரை வந்து செல்வார்கள். எல்லாருக்கும் வேலை உண்டு. ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் உதவிக்கொண்டு ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்பது எவ்வளவு விலை கொடுத்தும் கிடைக்கமுடியாத அனுபவம். இங்கே உள்ள ஆட்டோக்காரர்கள் போராட்டத்திற்கு வருபவர்களை இலவசமாக ஏற்றி இறக்குகிறார்கள், ஒவ்வொருவரும் சாப்பிட்டுவிட்டு வரும்போது இன்னொருவருக்குச் சாப்பாடு கொண்டுவருகின்றனர்.  கடைக்காரர்களும் உதவுகிறார்கள் சீவல் தொழிலாளிகளும் உதவுகிறார்கள். மாலையில் பெண்களை வீட்டுக்குச் செல்லுமாறு கேட்டால்,  நாங்கள் ஏன் பின்னேரம் போக வேண்டும்,  இரவு பத்துமணிக்கு நித்திரைக்குப் போகும்போது வீட்டுக்குப் போகிறோம் என்று சொல்கிறார்கள். மாணவர்கள் படிக்கிறார்கள், இளைஞர்கள் விளையாடுவதை நிறுத்திவிட்டுப் போராடும் இடத்தில் நிற்கிறார்கள். இரவில் தொலைக்காட்சி பார்ப்பதை பெரும்பாலானவர்கள் தவிர்த்து விட்டார்கள், ஒவ்வொருவரும் சேர்ந்து நடத்தும் ஒரு போராட்டத்தின் பந்தலில் நாம் இப்போது இருக்கிறோம்" என்று தோழர்கள் சொன்னார்கள்.

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியிலிருக்கும் மயானங்களை அகற்றக்கோரும் அந்தப் போராட்டப் பந்தலிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் கிந்துசிட்டி மயானத்தைப் பார்க்கச் சென்றோம். இது பாதையா? இதற்குள்ளால் மக்கள் எப்படிப் பயணம் செய்கிறார்கள் என்றே தெரியாதளவுக்கு அவ்வளவு மோசமான பாதை. பெரிய பாளமான கற்கள் வீதியைப் புடைத்துக்கொண்டு நிற்கும் மண்பாதைகள் அவை. வழியெங்கும் வீடுகளை கவனித்துக்கொண்டு வந்தோம். சின்னச் சின்னக் காணிகளில் குருவி வீடுகள். கிடுகும் ஓலையும் போட்டுக் கட்டி வைத்திருக்கும் தகர வீடுகளின் வாசலில் புழுதி தோய அலையும் சிறுவர்கள். 

இந்த வீதிகளையெல்லாம் எப்பொழுது தான் மனிதர்கள் திரியும் இடங்களாக கணக்கிலெடுத்து சீரமைத்துக் கொடுக்கப்போகின்றார்களோ தெரியவில்லை. உள்ளே சென்றால், பிரதேச மக்களில் சிலரால் உடைத்தெறியப்பட்ட மதிலைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். மயானத்தின் சுவர் விளிம்பில்   வீடுகளின் வேலிகள், அதன் வாசலுக்கு நேரேயும் வீடுகள் வரிசையாக இருந்தன. ஒரு நான்கு பரப்புக்காணி வருமென்று மட்டம் தட்டினோம். பிணமெரியும் வாசல்களில் வாழ்ந்து வருமவர்கள் இப்பொழுது அந்த மயானத்தை அங்கிருந்து அகற்றுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.





வரலாற்றில் எப்பொழுதும் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருக்கும் இந்த மக்களின் குரல்களால் தமிழ்ச்  சமூகத்தில் பெரும் அலைகளை ஏற்படுத்த முடிவதில்லை. பெரும்பாலானவர்களால் இந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உணரவே முடிவதில்லை.  தாத்தாமார்களின் சொகுசுத்தனங்களையும் அவர்கள் மற்றவர்களை உறிஞ்சி உருவாக்கிவைத்திருக்கும்  வாழ்க்கை முறையையும் கைவிடமுடியாத பேரர்கள் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாயே மதிக்க மாட்டார்கள். 

திருநெல்வேலியில் உள்ள பாற்பண்ணையிலும்  மயானப் பிரச்சினை உள்ளது. இங்கேயும் கூலித்தொழிலாளிகளும் அன்றாடம் உழைத்து வாழ்பவர்களுமே அதிகம். இது எந்தவகையிலான ஒத்தத்தன்மை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முதலில், யாழ்ப்பாணத்தின்  பெரும்பாலான சிறுநகரங்களில் ஆதிக்க சாதியினரை மையமாகக் கொண்டு வெவ்வேறு சாதியினர் அடுக்கடுக்காக இருப்பர்.  உதாரணத்திற்கு திருநெல்வேலியை எடுத்துக்கொண்டால், அதன் மையமான சந்தியில்  வெள்ளாளர்கள் உள்ளனர். மையத்திலிருந்து வெளிநோக்கிச் சென்றால் தச்சர்கள், கொல்லர்கள் மற்றும் இன்ன பிற இடைநிலைச்சாதியினர் உள்ளனர்.  அதனைத்தாண்டி அதன் மையமான இடத்திலிருந்தொரு மூலையில் பாற்பண்ணையில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த அடுக்கின் அமைவுகள் தற்செயலானவையல்ல. இது சாதி அடிப்படையிலேயே உருவாகிய நகரம். இதன் இறுக்கங்களும் பழைய நடைமுறைகளும் குறைந்திருந்தாலும் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் வாழ்கின்றன.

பாற்பண்ணையிலிருக்கும் அதிகமான இளைஞர்கள் திருநெல்வேலிச் சந்தியில்  மூட்டை தூக்குகிறார்கள், ஆட்டோ ஓட்டுகிறார்கள், கூலித்தொழில் செய்கிறார்கள், சைக்கிள் கடையில் வேலை செய்கிறார்கள், சீவல் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். இவை எல்லாம் ஏதோ இயல்பாக நடப்பதென்று நாம் சொல்லிக் கடந்து விட முடியாது. நமது மக்களின் இந்த நிலைக்கு வலுவான வரலாற்றுக்கு காரணங்கள் உள்ளன. அவற்றை நாம் அறிந்து கொள்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையில் இன்று பாதிப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கும் விடயங்கள் எவையும் தானாய் நிகழ்ந்தவையில்லை என்றும் இந்த நிலை மாறவேண்டுமானால் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்று புரிந்துகொள்ளலாம்.   தாத்தாமார்களின் பாவக்கணக்குகளை பேரர்கள் தீர்த்துவைக்கும் காலமிது.   



இந்த மயானப் பிரச்சினையில் பிரதானமாக வைக்கப்பட்ட வாதம் ஒன்றுண்டு. அதாவது, "மயானம் முதலில் வந்ததா மக்கள் முதலில் வந்தார்களா?" கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா என்ற பழையை கேள்வியைப் பிரதிபண்ணி இந்த மாபெரும் கேள்வியைக் கேட்ட மனிதர்களுக்கு "மக்கள் முக்கியமா? மயானம் முக்கியமா?" என்ற பதில் தர்க்கத்தினை ஒரு நண்பர் முன்வைத்தார். 

சாதாரண மக்கள், தமது வாழ்க்கையை ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியில் வளர்ந்து இன்று நிலத்தை வாங்கிச் சொந்தமாக்கியிருக்கிறார்கள். மயானத்துக்குப் அருகாமையிலான காணிகள் குறைவான விலைக்கு விற்கப்பட்டிருக்கலாம், மக்களும் தமது பொருளாதர நிலைமைகளினால் அவற்றை வாங்கி இருப்பார்கள்.  இப்படி அருகில் காணிகள் வாங்கும் போதோ மக்கள் குடியமரும் போதோ அதனை உடனடியாக அவதானித்துக் குறித்த பிரதேச அதிகாரிகள் அது தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டியும், நடவடிக்கை எடுத்தும் இருக்கவேண்டும்.  ஆனால் அவற்றை செய்யாமல் விட்டு மக்கள் காணிகளை வாங்கி, குடியேறி அங்கே வாழவும் ஆரம்பித்துவிட்ட நிலையில் மக்கள் நலனை முன்னிறுத்தி மயானங்களைத்தான் இடம் மாற்றவேண்டும் என்கிற வாதத்தினையே நாம் முன்வைக்கவேண்டி இருக்கின்றது.  இனிமேல் இறுக்கமான நடைமுறைகளைக் கொண்டுவரலாமே தவிர ஏற்கனவே உள்ள இந்தப் பிரச்சினைக்கு மக்களின் பக்கமே நாம் நிற்க முடியும். 


   
இத்தகைய மயானப் பிரச்சினையானது உரும்பிராய் மேற்கு, ஈவினை வடக்கு – திடற்புலம், புத்தூர் மேற்கு –  கிந்துசிட்டி, திருநெல்வேலி – பாற்பண்னை, மல்லாகம் போன்ற பல இடங்களில் நிலவுகின்றமை அவதானிக்கப்பட்டிருக்கிறது. இவை தொடர்பில் மாகாணசபை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறித்த பிரதேசங்களையும் இதனை ஒத்த நிலைமைகள் நிலவுக்கூடிய ஏனைய இடங்களையும் அடையாளங்கண்டு அங்கிருந்து மயானங்களை எங்கு இடம் மாற்றுவது, அதற்கான பொறிமுறை என்ன, எதிர்காலத்தில் மயானத்திலிருந்து எவ்வளவு தூரத்திற்கு அப்பால் மக்கள் குடியிருப்புகள் அமைய வேண்டும் என்பன தொடர்பில் வரையறைகளைத் தெளிவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் உறுதியாகச் செயற்படவேண்டும்.  

இந்தப் பிரச்சினை தொடர்பில்,  மக்களை ஒருங்கிணைத்ததும் அவர்களை வெகுஜனப் போராட்டம் நோக்கி நகர்த்தியதும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு. அவர்களின் மீதும், இந்தப் பிரச்சினையின் போது நிகழ்ந்த சில அசம்பாவிதங்கள் மேலும் பல விமர்சனங்கள் எழுந்தன. அவற்றையும் கவனத்திலெடுக்க வேண்டும். இது தொடர்பில் கட்சியின் அறிக்கையொன்றினையும், உதயன் பத்திரிகை அதற்கான தனது பதிலையும் கேள்விகளையும் முன்வைத்தமையையும் நாம் வாசிப்பது முக்கியமானது. அவற்றுக்கான இணைப்புகளை கீழே வழங்கியிருக்கிறோம். 

இவற்றுக்குமப்பால் ஒரு பொதுவான அம்சத்தினை அனைவரும்  புரிந்து கொள்ள வேண்டும். இங்கு நடைபெறும் பெரும்பாலான மக்கள் போராட்டங்களுக்கு அவை திசை திரும்பிப் போகும், அல்லது ஒரு சிலரின்( நல்லவர்களா / தீயாவார்களோ) போராட்டங்களாக சுருங்கிப் போகும் தன்மையுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடைபெறும் பல போராட்டங்களில் இது தான் நிலைமை. அதற்கு காரணம் நாம் அரசியலற்ற அரசியல் செய்ய நினைக்கும் ஒரு சமூகமாக எங்களை காட்டிக்கொள்வது தான். அது ஒரு தவறான அணுகுமுறை. நாம் அரசியல் தான் பேசுகிறோம். அரசியலில் ஈடுபடுவதென்பது தனியே கட்சி சார்ந்தது அல்ல, அமைப்புகளோ, தனிநபர்களோ கூட அல்ல. அரசியல் ஒரு கூட்டு நிகழ்வு. போராட்டங்களுக்கு அனைத்துத் தரப்பினரும் சென்று மக்களுடன் உரையாடி அவர்களின் நிலைப்பாடுகளில் ஆக்கபூர்வமான வகையில் செயலூக்கம் கொண்ட  கருத்துக்களை வழங்குவது தான், இது போன்ற அச்சங்களுக்குத் தீர்வு. இது இந்தப் பிரச்சினைக்கு மட்டுமல்ல. இனி வருகின்ற எல்லாப் போராட்டங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், அரசியல் தரப்புகள், செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகள் என்பன செயலூக்கம் மிக்க வகையில் பங்கேற்பினை நிகழ்த்துவத்தினூடாக தனிநபர் அல்லது அமைப்புகளின் அடையாளங்களைக்கடந்து பொதுப்பிரச்சினைகளை அதற்கேயான தளத்தில் வைத்து உரையாடும், கவனயீர்ப்பை ஏற்படுத்தும் போக்கு உருவாகும்.  

இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில் மாகாணசபையிலிருந்து உறுப்பினர் சிவாஜிலிங்கம், வடமாகாண ஆளுநர் மட்டுமே அந்தப் போராடும் மக்களை சென்று சந்தித்திருக்கிறார்கள்.  மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள்  மக்கள் தமது பிரச்சனைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றபோது நேரடியாகச் சென்று சந்திப்பதைத் தடுப்பது எது?   இரவு பகலாக ஒரு கிராமமே விழித்திருந்து போராடும் பந்தலுக்கு மாகாணசபையினரின் கார்கள் செல்வது கொஞ்சம் கஷ்டம் தான். அந்தப் பாதைகள் நிறைய வளைவு நெளிவுகள் உள்ளவை, சீரற்றவை, குடிசை வீடுகள் அடர்ந்த காணிகள், குழந்தைகள் பாதைகளைக்கடந்து ஓடிக்கொண்டேயிருப்பார்கள்... இதையெல்லாம் கடந்து கோயிலின் வாசலொன்றில் குந்தியிருக்கும் இந்த நிலத்தின் மக்களை சென்று சந்திப்பது கடினம் தான். 
* போராடும் மக்களுக்கு ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்கள் தொடர்பான ஆவணப் படங்கள் முதல் நாள் இரவு காண்பிக்கப்பட்டது. 


பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கும் இளைஞர்கள் இந்த மக்களையும் சென்று சந்திக்க வேண்டும்.  அவர்களின் பிரச்சினைகளை நேரில் பார்க்க வேண்டும். அதற்காகத் தங்கள் வாழ்நாளின் ஒரு நாளையேனும் கொடுக்குமளவுக்கு இதயமுள்ளவர்களாக இருக்க வேண்டும்  சாதிகளை, வர்க்கங்களைக் கடந்து சிந்திக்குமொரு தலைமுறைக்காகவே எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.

இளைஞர்களாகவும் போராடும் குணமுள்ளவர்களாகவும் உள்ள பலருக்கும் தெரிந்த பெயர் தான் சேகுவாரா. சே, தனது இளம் வயதில் மேற்கொண்ட பயணங்களும் சந்தித்த மனிதர்களும் தான் அவருடைய அரசியல் எது என்பதை தீர்மானிக்க வைத்தது. ஏன் அவர் மக்களை சந்தித்தார் அவர்களுடைய வித்தியாசமான பிரச்சினைனைகளை தொகுத்துப் புரிந்து கொள்ள ஏன் முயற்சி செய்தார் என்பது பற்றியெல்லாம் அவரே நிறைய எழுதியிருக்கிறார். மக்களுக்கான அரசியல் என்றும் உரிமைகள் என்றும் பேசுகின்ற இன்றைய இளைஞர்களுக்கான  எளிமைனயா தொடக்கமாக சேகுவாராவை கொள்ளலாம். அவரிலிருந்து தொடங்கி இன்னும் விரிவான அரசியல் சிந்தனையாளர்களையும் போராளிகளையும் அறிந்து கொள்ள வேண்டும். எல்லாச் சிந்தனையாளர்களிடமும் போராளிகளிடமுமிருந்த அடிப்படையான பழக்கம், அவர்கள் மக்களைச் சந்தித்தார்கள், மக்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள், மக்களின் பிரச்சினைகளை மக்களின் மொழியில் வெளிக்கொண்டு வந்தார்கள் அவர்களுக்கான சிந்தனையை, அரசியலை அவர்களை நேரடியாகச் சந்திப்பதன் மூலமே உருவாக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டார்கள். சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்துவதென்பது அதன் உருவத்தையே கலைத்துக்கலைத்து புதிய வடிவங்களை உருவாக்குவது போன்றது. அதனை நிகழ்த்த நினைப்பவர்கள் கொடுக்க வேண்டிய உழைப்பென்பது பெரியது. அவ்வாறான நோக்கத்துடன் இருப்பவர்கள் இதுபோன்ற போராட்டக்களங்களில் இருக்கின்ற மக்களையும், பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்ற மக்களையும் சந்திக்க வேண்டும். அவர்களின் குரலாகவும் தோளாகவும் மாற விரும்புகின்றவர்கள்  அவர்களுடையவர்களாயிருப்பார்கள். அவர்கள் தான், பேதங்களைக் கடந்த, வித்தியாசங்களை விளங்கிக் கொண்ட, நடைமுறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஆற்றல் பொருந்திய தலைமுறையாய் மாறுவார்கள்.   

கிரிஷாந்

முதலிரண்டு இணைப்புகளும் கட்சியின் அறிக்கையும், அதற்கான உதயன் பத்திரிகையின் பதிலும்.

மூன்றாவது, அகிலன் கதிர்காமரினால் எழுதப்பட்ட கட்டுரை, இவற்றினையும் மேலதிக வாசிப்புக்காக இங்கே வழங்கியிருக்கிறோம்.



புதன், 19 ஜூலை, 2017

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் - தேசத்தின் கோயில்

கண் விரித்தால் எங்கும் பச்சையாய்க் கிடக்கும் இயற்கையின் மண். முதுமரங்களும் ஆழமான காடுகளுமாக நிறைந்து கிடக்கும் அவ்வெளியை மனிதர்கள் தங்கள் கைகளால் உழுது விவசாய பூமியாக்கினர். நீண்ட நெடும் வயல்கள் உருவாகின. கால்நடைகள் செறிந்து மனித வாசம் வீசத் தொடங்கியது. குளங்கள் வெட்டியெடுக்கப்பட்டன. விவசாயம் தழைத்தோங்கியது. அரசு எழுச்சி பெற்றது.  இன்றுள்ள வவுனியாவிற்கும் முல்லைத்தீவிற்குமான எல்லைக்கோட்டிலிருக்கும் ஒட்டுசுட்டான் இப்படித்தான் வளர்ந்தது .



இற்றைக்கு ஆயிரத்து ஐநூறு வருட பழமை வாய்ந்த ஒட்டு சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தொல்வரலாற்றை அறிவதென்பது நமது நிலத்தின் அசலான வரலாற்றை நம் அடுத்த சந்ததிக்குக் கடத்துவதாகும். நமது மனங்கள் மதத்துடன் ஆழமாக வேரூன்றியது. அதன் நம்பிக்கைகள், சடங்குகளாகவும் குறியீடுகளாகவும் நமது வாழ்க்கையை தொடர்ந்து வருபவை. அதன் மூலமாகவே நாம், நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்கிறோம், வெளிப்படுத்துகிறோம். சைவ சமயத்தைப் பொறுத்த வரையில் அது ஆறு மதங்களின் தொகுப்பான இந்து மதத்தின் ஒரு கிளை. சைவத்தின் பிரதான கடவுளாக சிவனை முன்வைத்தே நமது தொல்கதை ஆரம்பிக்கின்றது. சிவனது குறியீடு லிங்கம். காலம் காலமாக நமது முன்னோர்களின் மனத்திற்குள்ளால் உருவாகி வந்த குறியீடு தான் அது. லிங்க அமைப்பென்பது ஆணுடையதும் பெண்ணுடையதுமான பிறப்புறுப்புக்களை இணைத்து உருவாகும் ஒரு முழுமை. அது  இந்த உலகின் மிக மூத்த நாகரீகங்களின் தொடர்ச்சிகளில் உருவாகி வந்த மனித உயிரின தோற்றத்தின் மூல வித்துக்களான பிறப்புறுப்புக்களை சேர்ப்பதன் மூலம் நிகழும் ஒரு திண்மம் அது. 

சுருக்க வரலாறு   

இலங்கையில் உள்ள மூன்று சுயம்பு லிங்க சிவாலயங்களில் ஒட்டுசுட்டான்  தான்தோன்றீஸ்வரமும் ஒன்று. தோன்றிய காலம் முதல் அந்நியரால் நிகழ்ந்த ஆக்கிரமிப்புகளினால் அழிவடையாமல் எஞ்சியிருக்கும் முதுபெருங் கோயில். சுயம்பு லிங்கத்திற்கு தொடக்கமில்லை என்ற நம்பிக்கையுள்ளது. அதற்கு உற்பாதங்கள் ஏற்படினும் திரும்பவும் பிரதிஷ்ட்டை செய்யப்படக் கூடியது. சிதைவுகளை வெள்ளி மற்றும் பொன்னால் நிரப்பலாம். பூசைகள் நிகழ்த்தப்படாமல் விட்டாலும் சிவன் சாந்நித்தியமாக வாசம் செய்வார் என்று சொல்லப்படுகிறது. 

தற்போது புழங்கி வரும் கர்ண பரம்பரைக் கதைகளின் படி, இவ்வாலயத்தின் திருப்பணி வேலைகளை குளக் கோட்டன் செய்வித்தான் என்றொரு நம்பிக்கையுண்டு. மேலும், மூன்று சித்தர்கள் இவ்வழியால் சென்ற வேளை, ஒட்டுசுட்டானில் பிரிந்து சென்றனராம், முதலாவது சித்தர் ஒட்டுசுட்டானுக்குத் தென் மேற்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள வாவெட்டி மலையில் தியானத்திலிருந்து சமாதியடைந்தார், இரண்டாவது சித்தர் ஒட்டுசுட்டானுக்குத் தெற்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள காதலியார் சம்மளங்குளத்தில் சமாதியடைந்தார், மூன்றாவது சித்தர் ஒட்டுசுட்டானில் உள்ள கொன்றை மரம் ஒன்றின் கீழ் சமாதியடைந்தார். இவர் பூசித்த சிவலிங்கம் இவருடனேயே புதைந்திருக்க வேண்டும், இவ்விடத்திலேயே பிற்காலத்தில் தற்போதுள்ள சிவலிங்கம் தோன்றியதாகவும் கதையுண்டு. 



பிறிதொரு கதையின் படி, யாழ்ப்பாணம் இடைக் காட்டைச் சேர்ந்த தீரபுத்திரர் என்ற சைவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் வன்னிக்கு வந்து குடியேறினார். அவர்களும் அவர்களின் சந்ததியினரும் வாழ்ந்த இடமே தற்போதும் ஒட்டுசுட்டானில் இடைக்காடு என்று அழைக்கப்படுகிறது. தீரபுத்திரர் காடு வெட்டி அந்நிலத்தில் குரக்கன் பயிர் இட்டிருந்தார், குரக்கன் கதிர்களை வெட்டிய பின் அதன் ஓட்டுகளுக்கு தீயிட்டுக் கொளுத்தினார். அப்படிச் செய்த போது ஒரு கொன்றை மரத்தடியில் ஓட்டுக்கள் எரியாமல் இருப்பதைக் கண்டார். எப்படியும் ஓட்டுக்களை வெட்டிவிட வேண்டுமென்று மண்வெட்டியால் வெட்டினார். வெட்டிய இடத்தில் இரத்தம் கசிவதைக் கண்டார். இந்நிகழ்ச்சியின்  மர்மத்தை அறியாத தீரபுத்திரர் அப்பகுதியை ஆண்ட வன்னியனிடம் இதைத் தெரிவித்தார். வன்னி மன்னன் குறிப்பிட்ட இடத்தை பார்வையிட்ட பின்னர் அவ்விடத்தில் கோயிலமைத்து வழிபாடு செய்யுமாறு கூறினான். கொன்றையடிப்பிள்ளையார் எனும் பெயரில் சிறு ஆலயம் அமைத்து வழிபடப்பட்டது. சில நாட்களின் பின் சிவலிங்கம் சுயமாக தோன்றியதை அம்மக்கள் கண்டனர். தானாக தோன்றிய லிங்கம் என்ற படியால் தான்தோன்றி ஈஸ்வரர் என்று அழைக்கப்பட்டது. எரியாத இடத்தில் தோன்றியதால் வேகாவனேஸ்வரர், வேகாவனப்பெருமான் என்றும் அழைக்கப்பட்டார். ஓட்டுக்களைச் சுட்டதினாலே பிரபலமான அந்த இடம் ஒட்டுசுட்டான் என்று பெயர் பெற்றது. 

அதன் பின்னர் ஏராளமான கால மாற்றங்களையும் கடந்து தானே அதுவாகி நிற்கும் லிங்கம் எத்தனையோ நிகழ்வுகளின்  சாட்சியாக நம்முன்னே நிற்கின்றது.

திருவிழா 

வருடாந்த உற்சவம் ஆனிமாதத்து அமாவாசையில் தொடங்கும்.  

பதின்மூன்றாம் நாள் வேட்டைத் திருவிழா நடைபெறும். தீராத நோயினால் பீடிக்கப்பட்டோர் தாம் வேட்டைத் திருவிழாவின் போது வேடனாக வருவதாக நேர்த்திக்கடன் வைப்பார். வன்னிப்பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் பெருமளவான மக்கள் வருகை தருவார்கள்.  உடம்பெங்கும் கரிபூசி வாகங்குழைகளால் உடல் போர்த்தி கையில் வாகந் தளிர் கட்டிய தடியொன்றைப் பிடித்தபடி ஆயிரக்கணக்கானோர் வேடுவ உடையில் ஈஸ்வரர் பறை முழங்க முன் செல்ல பின் தொடர்வர். தலையில் தென்னோலையால் அல்லது   வாகங் குழையால் ஆன தொப்பியை அணிந்திருப்பர். வேடுவர் தலைவர் சுரைக்குடுவையினுள் தேன் வைத்திருப்பார். இத்தலைமைப் பதவி  பரம்பரையானது. தலைமை வேடனின் ஆணைக்கு கட்டுப்பட்டு ஏனையோர் நடக்க வேண்டும். ஈஸ்வரர் வேட்டைக்குச் சென்று விட்டுத் திரும்பும் போது அம்மனுக்கும் ஈஸ்வரருக்கும் வாதாட்டம் இடம்பெறும். இந்த ஊடலை மணியகாரனே தீர்த்து வைப்பார். பின்னர் ஈஸ்வரர் ஆலயத்திற்குள் நுழைந்ததும் தலைமை வேடர் சமிக்சையைத் தொடர்ந்து  ஒருவர் பின் ஒருவராக விழுந்து வணங்கி, பின்னர் கோயிலை வலம் வந்து ஒட்டுசுட்டான் கட்டைக்காட்டு குளத்துக்குச் சென்று தம் வேடுவ உடைகளை நீக்கிய பின் நீராடுவர். இதுவே பழைய மரபு. விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாவும் இது தான்.  



பதினைந்தாம் நாள் தேர்த்திருவிழாவும், பதினாறாம் நாள் தீர்த்தமும் நடக்கும்.

1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட விடுதலைப் போராட்ட காலத்தில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டன. அதன் போது முல்லைத்தீவில் உள்ள பல கோயில்களில் பல சிதைவுகளும் சிக்கல்களும் ஏற்பட்டன. 1990 களில் தான்தோன்றீஸ்வரம் வானக்குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டது. 

ஆலயத் திருப்பணி வேலைகள் 

குளக்கோட்ட மன்னன் ஆலயத்திருப்பணி வேலைகளில் ஈடுபட்டிருந்தான். வன்னிக்குறுநில மன்னர்களும் இவ்வாலயத்துக்குத் திருப்பணி வேலை செய்தனர். போர்த்துக்கேயர் காலத்தில்( 1505 - 1658 ) நடைபெற்றதாகக் கூறப்படும் கதையொன்றுண்டு. போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பிடித்த பின்னர் வன்னி மீது தமது மேலாண்மையைச் செலுத்த முனைந்தனர். வன்னியர்கள் திறைதருவதாக ஒப்புக்கொண்டு ஆண்டுதோறும் யானைகள் அனுப்பும் வழக்கம் இருந்தது. காட்டில் யானைகளைப் பிடிப்போர் பணிக்கர் என அழைக்கப்பட்டனர். காக்கைப் பணிக்கருக்கு வன்னியரசர்களால் மானியமாக கொடுக்கப்பெற்ற குளமும் அதனைச் சார்ந்த வயல்களும் காக்கைப் பணிக்கன் குளம், காக்கைப் பணிக்கன் வயல் என இன்றும் அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவின் முன் யானைகள் பிடித்துத் தருமாறு வன்னியர் பணிக்கன் ஒருவனுக்குக் கட்டளையிட்டார். எங்கு தேடியும் யானைகள் அகப்படவில்லை.  யானைப் பணிக்கன் தான்தோன்றி ஈஸ்வரனிடம் முறையிட்டான். யானைகள் கிடைக்கும் பட்சத்தில் கோயிலை பெருப்பித்துக் காட்டுவதாக நேர்த்திக்கடன் வைத்தான். கனவில் " பெரிய இந்திமடுவிலுள்ள கிளிமடு எனும் இடத்தில் பௌர்ணமி தினத்தில் ஏராளமான யானைகளை காண்பாய்" என்ற குறிப்புக் கிடைத்தது. அதன்படியே தேவையான யானைகள் கிடைத்தன. பணிக்கன் கோயிலைப் பெருப்பித்துக் கட்டினான்.

பிரித்தானியர் காலத்தில் மீண்டும் கோயில் பெருப்பித்துக் கட்டியமைக்கான சான்றுகள் உண்டு. ஜெ. பி. லூயிஸ் எழுதிய வன்னிக் கைநூலில் 1874 ஆம் ஆண்டு வரையில் ஒட்டுசுட்டானுக்கு அண்மையிலுள்ள தட்டயமலை எனும் இடத்தில் இருந்த அழிபாடடைந்த பௌத்த மடாலயத்தின் கற்கள் ஒட்டுசுட்டானில் சைவக் கோயில் கட்ட பயன்படுத்தப்பட்டது என்ற குறிப்புண்டு.

போன நூற்றாண்டின் முற்பகுதியில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஓவசியர் திரு. த. சின்னத்துரை அவர்கள் சிவன் கோயில் திருப்பணி வேலைகளில் முன்னின்று உழைத்தார். இவரின் முயற்சியாலேயே கோயிலும் திருக்குளமும் சிறப்பாக கட்டடப் பெற்றன. 

1964 ஆம் ஆண்டும் பெரும்புயலினால் ஆலயத்தின் வெளிமண்டபம் முற்றாகச் சேதமடைந்தது. மூன்று தேர்களும் சேதமடைந்தன. சேதமடைந்த வெளிமண்டபத்தை ஆலய பரிபாலன சபையினர் திருத்தியமைத்தனர். 

1989 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி திருப்பணிச் சபையொன்று ஆரம்பிக்கப்பட்டது. இத்திருப்பணிச் சபை ஆலயத்தின் தெற்கு வீதி மண்டபத்தை திருத்தியமைத்தது. அம்மன் ஆலயமும், வைரவர், சண்டேஸ்வரர் ஆலயங்கள் புதிதாக கட்டப்பட்டன.

இதன் பின்னர் இடம்பெற்ற புணருத்தரான வேலைகளைத் தொடர்ந்து இன்றுள்ள வடிவிற்கு ஆலயம் உருமாற்றம் பெற்றது. எதிர்வரும் நாட்களில் 108 அடி கொண்ட ராஜகோபுரம் ஒன்று அமைக்கப்படவிருக்கிறது.            

இலக்கியம் 

தான்தோன்றி ஈஸ்வரர் மீது கொக்குவில் குகதாசர் சு. சபாராத்தின முதலியார் பாடிய ஒட்டுசுட்டான் சிவபெருமான் ஆசிரியர் விருத்தமும் (1833 ) ஓர் ஊஞ்சற் பதிகமும் வேட்டைத் திருவிழாவின் போது படிக்கப்படும் வாதாட்டப்பாடலும் தான்தோன்றி ஈஸ்வரர் பாடலும் உள்ளன. 

ஊஞ்சற் பதிகத்தை சுதுமலைப்பண்டிதர் ஆ. சி. நாகலிங்கமும் பாமாலையை  (1976 ) முல்லைமணியும் பாடியுள்ளனர்.           

நவீன ஆபத்து 

முன்னர் வாவெட்டி மலையிருந்து வேஷங் கட்டி ஆடி வரும் வேட்டைத் திருவிழா, 1983 க்குப் பின், யுத்தத்தின் காரணமாக, கோயிலுக்கு அண்மையிலுள்ள காணியிலிருந்து தான் வேஷம் கட்டி வருவார். தற்போது, தமது நீண்ட மரபை மீளவும் நிகழ்த்த அங்கு சென்றனர். ஆனால் சென்ற மக்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி தான், வாவெட்டி மலைக்கு அண்மையில் கல் குவாரிகளை அமைத்து பெருமெடுப்பில் கல்லகழ்தல் இடம்பெறுகிறது. இதனால் ஆயிரத்து ஐநூறு வருடம் பாரம்பரியம் கொண்ட தமிழர்களின் மரபுரிமைச் சொத்துக்கள் அடங்கிய பிரதேசமும் அவ்விடத்திற்கண்மைய வாழ்வியலும் பாதிக்கப்பட போவது உறுதி. இன்றும் எஞ்சிய கொடித்தம்பத்தையும் கற் தூண்களையும் அந்த இடத்தில் பார்க்கலாம். முப்பத்து மூன்று வருடங்களின் பின் மக்கள் தமது ஆயிரத்தைநூறு வருடச் சடங்கை ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த இடத்திற்கு வாவெட்டி ஈஸ்வரர் என்றும் பெயர்ப்பலகை சூட்டியிருக்கிறார்கள்.   

இப்பொழுது ஆலயம் என்பது பக்தி செலுத்தப்பட வேண்டிய இடம் மாத்திரமல்ல, பாதுகாக்கப்பட வேண்டிய இடமும் ஆகும். நமது மரபை, சடங்குகளை அறிவதென்பது தனியே கும்பிட்டுவிட்டு விலக்குவதற்கானதல்ல. அது நமது முன்னோர்கள் நமக்களித்துள்ள சொத்து. நமக்களித்துள்ள வாழ்வியல் முறை. அதன் குறைபாடுகளை நாம் உரையாடி வளர்த்துச் செல்ல வேண்டும். அறிவு பூர்வமாக நமது மத, கலாசார, பண்பாட்டு விடயங்களை உரையாட வேண்டும். அடையாள அழிப்பை எதிர்ப்பதற்கான மன நிலை அப்பொழுது தான் உருவாகும். வெற்றுக் கோஷங்களால் நம்மால் அதை செய்ய முடியாது. ஆலய மலர்களிலும் ஆக்கபூர்வமான வரலாற்றுப்பின்புலத்தைக் கொண்ட கட்டுரைகள் விவாதங்கள் உள் வாங்கப்பட்ட வேண்டும். ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தன்மைகள் உண்டு. அதிலிருந்து தான் அது தனக்கான சொந்த நறுமணத்தை மற்றைய சமூகங்களுக்கிடையில் வெளிப்படுத்த முடியும். 

சைவம் நெகிழ்ச்சியானதொரு மதப் பிரிவு. அதன் வரலாறும் இலக்கியங்களும் அதனூடாக அடைந்த ஞானமும் மிகப்பெரியது. அதே வேளை ஈழத்தில் அதன் அரசியற் பரப்பில் நல்லூர், மாவிட்டபுரம், கீரிமலை, நயினாதீவு, செல்வச்சந்நிதி, வல்லிபுரம், ஒட்டுசுட்டான், வெருகல், சித்தாண்டி, திருக்கோவில், கொக்கட்டிச் சோலைஆகிய இடங்களிலும் பாடல் பெற்ற திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகியவற்றிலும்  "தேசத்துக்கோயில்கள்"  என்று கொள்ளத்தக்க வகையைச் சேர்ந்த ஆலயங்கள் அமைந்திருந்தன என்று பேராசிரியர் சி. பத்மநாதன் சொல்கிறார்.  சித்தர் மரபுடனும் உருவ வழிபாட்டுடனும் இணைந்த தான்தோன்றீஸ்வரர் ஆலயம்  ஒரு முக்கியமான இணைப்பு.  "நாம் யார்?"   "இந்த வாழ்க்கை எதற்கானது?" போன்ற கேள்விகளுக்கு நமது மரபு நமக்களித்திருக்கும் பல வழிகளை அறியுமொரு வெளியாகவிருக்கும்  ஆன்மீக அமைப்பான  கோயிலை அதன் ஆன்மீக அர்த்தத்திலும் அரசியல் அர்த்தத்திலும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய காலமிது. 

கிரிஷாந்

( இங்கு எடுத்தாளப்பட்டுள்ள வரலாற்றுத்தகவல்கள் எழுத்தாளர் முல்லைமணி  தான்தோன்றீஸ்வரர் ஆலய மலரில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து பெறப்பட்டவை.) 

நன்றி - Quick news tamil  

http://www.quicknewstamil.com/2017/07/07/oddusuddan-thanthondreeswarar-temple/ 

கண்ணீரில் விளக்கெரியும் தேசம்



கண்ணகி, அறச் சீற்றத்தின் படிமம். நீதி கேட்டு அரசை எரித்த பெண்ணின் கதை தான் கண்ணகியம்மனின் கதை. அவள் முல்லைத்தீவு மக்களுக்கு நெருக்கமானதொரு தெய்வம். இறுதியுத்தத்தின் பின்னர் இழந்த புத்திரருக்காகவும் மாண்ட சோதரருக்கும் கண்ணீர் விட்டு இன்றும் நூறு நூறு நாட்களாய் தெருவிலிருக்கும் ஆயிரம் ஆயிரம் தாய்மாரின் படிமம்.




ஏதோவொரு காலத்தில் இந்த நிலத்தில் அந்தப் பெண்ணின் கால் நடந்துதானிருக்கும். இன்று ஒரு பெரும் விடுதலைப் போராட்டம், லட்சக் கணக்கில் உயிர்களைக் கொடுத்து உருவாக்கிய பெருங்கனவு சிதைந்து இரத்தச் சகதியில் கடற்கரை உப்பில் முடிவுற்றிருக்கிறது. போராட்டத்தில் ஏராளம் விமர்சனங்கள் இருப்பினும், மனிதர்களின் பேரிழப்பென்பது பெருந்துயர். அதனை வெளிப்படுத்த உலகெங்கும் ஏராளம் வடிவங்களிருக்கின்றன.

மனிதத் துயரங்களை அவர்களின் இதயத்துள் ஆழ ஊடுவியிருக்கும் வேரிலிருந்து கொண்டுவருவதென்பது கலையில் முக்கியமானதொரு பண்பு. "முல்லைத்தீவு சகா" என்ற, சோமீதரனின் ஆவணப்படம் அந்த வகையில் முக்கியமானது. ஈழப்போராட்டத்தின் மைய இழையிலிருந்து உருவாகி வரும் ஒரு கதை தான் அடக்குமுறையின் வடிவங்களும் நாடு துறத்தலின் வலியும். 

ஆவணப்படம், முல்லைத்தீவில் இறுதி யுத்தத்தின் முடிவுக்கு முன்னர் கடைசியாக இடம்பெற்ற கூத்திலிருந்து ஆரம்பிக்கிறது. பாட்டின் வரிகள் இழப்பையும் மரணத்தையும் கூவுகிறது. உலகெங்கும் நடந்த யுத்தப்  பேரழிவுகளையும், விடுதலைக்கும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் நடந்த யுத்தங்களில் இடம்பெற்ற 'இனப்படுகொலையை' காட்டியபடி, உலகம் முழுவதும் ஆயுதங்களால் நிகழ்த்தப்படும் அழிவுகளை ஒன்று மாறி ஒன்றாக திரை மாற்றுகிறது. ஈழத்தில் நடந்த போரின், யுத்த சாட்சியங்களின் குரலுடனும் யுத்தக் குற்றவாளிகளின் குரலுடனும் மரணங்களினதும் யுத்த விமானங்களின் இரைச்சலுடன் விரியும் யுத்தத்தின் அசலான ஒளிப்பதிவுகளுடனும் தொகுக்கப்பட்டிருக்கிறது. மகிந்த ராஜபக்ச, கோத்தபாய, சரத் பொன்சேகா என்று யுத்தத்தை முன்னின்று நடத்திய கொலைகாரர்களின் குரலை அப்படியே காட்டியபடி இடையிடையில் யுத்தத்தின் காட்சிகளையும் ஓடவிட்டிருக்கிறார். @இந்த நாட்டில் எந்த விசாரணையும் தேவையில்லை. நான் எவையும் அனுமதிக்கப் போவதில்லை என்ற கோத்தபாயவின் குரலை அதில் பதிவு செய்திருக்கிறார், இன்று வரைக்கும் ஆட்சியில் யார் மாறினாலும் கோத்தபாயவின் அதே குரலைத் தான் கேட்க முடிகிறது. யுத்த சாட்சியான ஒரு வயதானவரின் சாட்சி, சொல்லப்பட்ட பின் வைத்தியசாலையில் வேலை செய்த பெண்ணின் சாட்சியம் முன்வைக்கப்படுகிறது. 'வன்னி ஒரு சுதந்திர பூமியா, சந்தோசமான ஒரு இடமா, நான் நினைச்சுப்பார்க்க முடியாத அளவுக்கு சந்தோசமான உலகமா இருந்தது. அதே வன்னியை அதே இடத்தை சுடுகாடா பார்த்திட்டு வரேக்க, எங்கு பார்த்தாலும் பிணங்களும், உடல்கள் சிதறிய படியும் .. எரிஞ்சு கொண்டிருந்த ஒரு சுடுகாடு மாதிரித் தானிருந்தது' என்ற அவர் தொடர்ந்தும் கதைகளைச் சொல்கிறார், நீதி கேட்கப்படுகிறது. யாரிடமும் பதிலில்லை.  

முல்லைத்தீவு எப்படியானதொரு நிலமாகவிருந்தது, பின்னர் அது எப்படியொன்றானதாக மாறியது. எது மாற்றியது என்பது தான் ஆவணப்படம் பேசும் அரசியல்.



இன்றுள்ள வடக்கு கிழக்கு, யுத்தத்தின் நினைவுகளடங்கிய ஒரு வாழும் அருங்காட்சியகம். இன்னும் முடிவுறாத, மறந்து முடிக்காத பேரிழப்பைச் சந்தித்த ஒரு இனம் தன்னை ஆவணப்படுத்துவதென்பது, அதனூடாக சர்வேதசத்தில் தனது குரலைப் பதிவுசெய்வதென்பது  அவசியமானது. இன்று வரைக்கும் ஈழத்தமிழர்கள் எடுத்த ஆவணப்படங்கள் என்பவை சொச்சமே. அது தனியே படங்களில் மட்டுமல்ல, வரலாறு நெடுகிலும் ஈழத்தமிழர்கள் தங்களது ஆவணங்களை இழந்தவர்களாகவே அலைகிறார்கள். காலடி நிலத்தில் அவர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது, கொல்லப்பட்ட மக்களுக்கு என்ன நீதியிருக்கிறது. அதற்காக, எங்களிடமுள்ள ஆவணங்களை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம். நாம் நமது இழப்புக்களை எப்படி எதிர்காலத்திற்கான மூலமாக பயன்படுத்தப்போகிறோம். அவர்களின் தியாகங்களுக்கு எங்களின் பதிலென்ன?

கட்டிய வீடுகள் இடிக்கப்பட்டன, நட்ட மரங்கள் சரித்து வீழ்த்தப்பட்டன, கல்லறைகள் பெயர்த்தெடுக்கப்பட்டன, நினைவிடங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன, புதிய நினைவிடங்களையும் வெற்றிச்சின்னங்களையும்  அரசு எழுப்பிக்கொண்டிருக்கிறது. வரலாற்றில் வாழ்ந்த மன்னர்களையும், நம் ஆளுமைகளையும் கேவலமான முறையில் சிலை வைத்துக்கொண்டிருக்கும் நாம் இந்த அரசின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையில் அழிந்து தான் போகப்போகிறோம். முல்லைத்தீவில் உள்ள வித்தியானந்தா கல்லூரிக்கு முன்னர் ஒரு பாரதியார் சிலை இன்னமும் திறக்கப்படாமலிருக்கிறது. திறப்பார்கள் என்று தான் படுகிறது.அந்த சிலை  பாரதியார் இருப்பதைப்போன்று  வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உலகத்திலேயே பாரதியாரை 'கொமட்டில்' இருப்பதைப்போன்ற போஸில் சிலை வைப்பது ஈழத்தமிழர்களாய்த் தானிருக்கும். மக்களுக்காக எழுந்தது நின்று போதும் மிஸ்ட்டர் பாரதியார் கொஞ்சம் இருங்கள் என்பது போலிருக்கிறது அந்தச் சிலை. 

இன்றைய அடையாளங்கள் தான் நாளைய சொத்துக்கள். நீண்ட பண்பாட்டுத்தொடர்ச்சி கொண்ட இனத்தில் இன்னமும் ஆவணங்களையும் புதிய அடையாளங்களையும் நினைவு படுத்துவதென்பது பற்றிய கரிசனை கொஞ்சமுமில்லை. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைப் பார்த்தால் இதைச் செய்தவர்களின் கன்னத்திலறையவேண்டும் போலுள்ளது. எவ்வளவு மோசமான வடிவமைப்பு அது. இது தான் கொல்லப்பட்டவர்களுக்கு செலுத்தும் அஞ்சலியா? நினைவிடமா?

இந்தப் பின்னணியில் நினைவு கூர்தலின் அரசியல் பற்றி நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஞாபகம் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். எங்களின் மேலான அழிப்புகள், அடக்குமுறைகள் போன்றவற்றின் எல்லாவகையான ஞாபகங்களையும் நாம் திரட்டி வைத்திருக்க வேண்டும். அதனூடாகத் தான் நாம் நம்மை ஒடுக்குபவர்களின் தரப்பிலிருக்கும் மக்களுடனும் நமது மறதியுடனும் உரையாட முடியும். 

சோமீதரனின் இன்னொரு முக்கியமான ஆவணப்படமான 'எரியும் நினைவுகள்'  யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பானது. அதனை கொழும்பில் திரையிட்ட போது, சிங்களப் பார்வையாளர்கள் மிகையாக உணர்ச்சிவசப்பட்டார்களாம். இப்படியெல்லாமா செய்தார்கள் இராணுவம் என்று, இது ஒரு ஆழமான உண்மை. நாம் நமது துயரங்களை நாமே ஞாபகப்படுத்திக்கொண்டிருப்பதல்ல ஆவணத்தின் வேலை, அதனூடாக உலகெங்கும் உள்ள ஜனநாயக சக்திகளையும் மனிதர்களையும்  நம் எதிர்த்தரப்பையும் கேள்விக்குட்படுத்துவது.



அந்தக் கேள்வியைத் தான் முல்லைத்தீவு சகா எழுப்புகிறது. இத்தனை இழப்புக்களையும் கொடூரங்களையும் நடத்திய அரசு நாம் மனிதாபிமான யுத்தத்தை செய்தோம் என்று சொல்கிறது. நமது அரசியல்வாதிகளோ தங்கள் பிரச்சினைகள் பார்க்கவே நேரமில்லாமல் திரிகிறார்கள். இந்த இடத்தில் சிங்கள அரசின் வெற்றிச் சின்னங்கள் மிகுந்த கலைநேர்த்தியுடன் வைக்கப்பட்டிருப்பதை பார்க்கும் போதெல்லாம், தோற்கடிக்கப்பட்ட தரப்பு இதனை விடவும் அதிகமான இழப்புக்களை சந்தித்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கலைகளும் குரல்களும் ஓங்கி ஒலிக்க வேண்டும். 

ஆனால், இந்த வகையான ஆவணப்படங்களை இலங்கையில் சுதந்திரமாக திரையிட முடியுமா? யாழ்ப்பாணத்தில், 'எரியும் நினைவுகள்' என்ற நூலக எரிப்பு பற்றிய ஆவணப்படமே இன்னமும் நூலகத்தில் திரையிடப்பட முடியாதுள்ளது. கேட்டால் நூலகத்திற்கு பிரச்சினை வரும் என்று நிர்வாகத்திலிருப்பவர்கள் பயப்படுகிறார்கள். வாசலில் விளக்கு வைத்துக்கொளுத்தவும் அஞ்சலிக்கூட்டம் நடத்தவுமுள்ள அனுமதி, ஆவணப்படத்தை திரையிட இல்லை. ஏனென்றால் எந்தவொரு அஞ்சலிக்கூட்டத்தையும் விட ஒரு ஆவணத்திற்கு அதிக சக்தியுள்ளது. நூலக எரிப்பு பற்றிய படம் வேறு இடங்களில் திரையிடப்பட்டிருந்தாலும், அந்த அழிப்பு நடந்த நூலகத்தில் அது இன்னமும் முடியவில்லை. 

அதற்கே அந்த நிலமையென்றால்    முல்லைத்தீவு சகா திரையிடல் நிகழ்ந்தால் அவ்வளவு தான். இவ்வாறிருக்க 'முல்லைத்தீவு சகாவிற்கு' கேரள மாநிலத்தில்,சிறந்த சர்வதேசஆவணப்படத்திற்கான விருது 2010 இல் பெறப்பட்டது . அதன் போது ஆவணப்பட இயக்குனர் சோமீதரனை விடுதலைப்புலிகளை மீள இணைக்கிறார் என்ற பேரில் புலனாய்வு விசாரணை வந்தது.       

இந்த ஆவணப்படத்தினை செய்திருப்பதினூடாக யுத்தத்தின் இரக்கமின்மையை, அரசின் இனப்படுகொலையை சர்வதேசத்திடம் கொண்டு சேர்த்திருக்கிறார் சோமீதரன். அவருடைய குரல் இந்த சமூகத்தின் அழிக்கப்பட்ட மக்களினதும் நினைவுகளினதும் ஆவணமாயிருக்கும். கண்ணகியம்மன் நீதி கேட்ட குரல் அது. கடல் நீரில் விளக்கெரியும் அம்மனுடன் சேர்ந்து கண்ணீரில் எரிந்த தேசத்தின் குரல் அது.

கிரிஷாந்

Thanks - Quick news tamil 

http://www.quicknewstamil.com/2017/07/03/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86/  


அரசியல் பழகு

 


முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கான ஆதரவுக் குரல்கள் எழுச்சிபெற ஆரம்பித்திருக்கும் பின்னணியில் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. வடக்கு மாகாண சபையின் முன்னாலும் அதன் பின்னர் விக்னேஸ்வரனின் வீட்டிலும் திரண்ட ஐநூறுக்கும் அதிகமான இளைஞர்களின் ஒருங்கிணைவென்பது யுத்தத்திற்குப் பின்னரான தமிழ் அரசியல் அரங்கில் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. ஒரு ஜனவசியம் மிக்க அரசியல் தலைமையின் பேரில் 'தமிழ்த்தேசியம்' என்ற கொள்கையின் பேரில் திரண்டிருக்கும் இந்த சக்தி ஓர் அலையாக மாற்றம் பெறுமா? விக்னேஸ்வரன் இன்னொரு அரசியல் குழுவின் தலைமையாக மாறுவாரா? அவ்வாறு அவர் மாறுவது தமிழ்மக்கள் மத்தியில் விக்னேஸ்வரன் மீதான அபிமானத்தை எவ்விதம் பாதிக்கும்? 

முதலமைச்சரின் விசாரணைக்குழு அறிக்கையின் பின்னரான முடிவுகளை நாம் அறிவோம். தமது அமைச்சர்களை பதவிகளை தியாகம் செய்யச் சொல்லியிருக்கிறார். அவர்களும் செய்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முன்னுதாரணமான நடவடிக்கை. இதை விட அதிகபட்சமான சினிமாத்தனமான முடிவுகளையோ அல்லது பின்னடிப்புக்களையோ அவர் செய்திருந்தால் அது அவரது ஆளுமை ஏற்படுத்தியிருக்கும் விம்பத்திற்கு பொருந்தாத ஒன்று. நீதியை அறிந்த ஒருவர், அதைக் கறாராகக் கடைப்பிடிப்பவர் என்ற மனப்பிம்பம் அவருக்கு மக்கள் மத்தியில் ஆழமாக உள்ளது. இளைஞர்கள் நேர்மையான, அறத்தின் பக்கம் நின்று பேசும் முதல்வரை, தமது கனவாகக் கொண்டிருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் அவர்களது கனவை ஈடுசெய்யும் தலைமையாக விக்னேஸ்வரன் இருக்கின்றார். அதிகபட்சம் தாம் விரும்பும் உண்மையைப் பேசும் ஒருவராக தமிழ்மக்கள் அவரை மாற்றியிருக்கிறார்கள். இந்தப் பின்னனியில் விக்னேஸ்வரனின் மீதான நம்பிக்கையில்லப் பிரேரணையை அதைக் கொண்டு வந்த தரப்புக்கள்  மீள எடுப்பதைத் தவிர வேறு வழியில்லையென்றே தோன்றுகிறது. விக்னேஸ்வரனுக்கெதிராகக் கைநீட்டும் எவருக்கும் விக்னேஸ்வரன் அளவுக்கு ஜனவசியமோ கருத்துக்களை வெளிப்படுத்தும் நிதானமோ இல்லை. இந்த நிதானமான முதியவரின் குரலுக்கு ஒரு அலையை வீச வைக்கும் சக்தியிருக்கிறதென்றே அவதானிக்க முடிகிறது. 



விக்னேஸ்வரன் இன்னொரு அரசியல் குழுவிற்கு தலைமையேற்கச் செல்வாரா? விக்னேஸ்வரன் தமிழ்மக்கள் பேரவையினூடாக தனது இன்னொரு அரசியல் பிரவேசத்தை நிகழ்த்துவாராயின் ஒப்பீட்டளவில் அது விக்னேஸ்வரனை விட மக்கள் பேரவையில் உள்ள பிற அரசியல் குழுக்களுக்கே அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக இருக்கும். அது விக்னேஸ்வரனின் ஜனவசியத்தை, ஒளியை தங்கள் தரப்புடன் இணைத்துக்கொள்வதன் ஊடாக தமது தரப்பை வலிமைப்படுத்திக்கொள்ளவே உதவும். ஆனால் அதனைப் பயன்படுத்தி பொருட்படுத்தக் கூடிய மாற்றங்களை இவர்கள் ஏற்படுத்துவார்களா?  அல்லது இன்னொரு தெரிவாக மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கமாக மாறுவாராயிருந்தால் இப்பொழுது நிலவும் எதிர்ப்புகளை எவ்விதம் சமாளித்து தனக்கு வாக்களித்த மக்களுக்கு நியாயமாக நடந்துகொள்ளப் போகிறார்? அதற்கான வாய்ப்பிருக்கிறதா? 

விக்னேஸ்வரன் எடுக்கப்போகும் தேர்வு சம்பந்தமாக தமிழ் மக்கள் மத்தியில் நிச்சயம் மாறுபட்ட அபிப்பிராயங்கள் ஏற்படவேசெய்யும்.  ஆனாலும் அது அது எவ்விதத்திலும் அவரது அரசியல் மதிப்பை மாற்றப் போவதில்லை. அரசியலில் தந்திரம் முக்கியமானதென்றாலும் மக்கள் தந்திரத்தை விட அறத்தின் பக்கமே நிற்பார்கள். அதுவே மக்களின் அளவுகோலாக இருக்கும். அந்தளவுக்கு விக்னேஸ்வரன் மக்கள்மயப்பட்டிருக்கிறார்.

 இதனோடு இணைத்து விக்னேஸ்வரனின் நிர்வாகத்திறமைகள் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் நாம் பொருட்படுத்த வேண்டும். அது விக்னேஸ்வரனை தலைமையாகக் கொண்டாடும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. ' நல்லவர்' என்ற பண்பு மட்டும் ஒரு அரசியல் தலைமைக்குப் போதாது. தமிழ் மக்களின் இழப்பென்பது பெரியது. இவ்வளவு பெரிய இழப்புகளை சந்தித்த ஒரு மக்கள் தொகுதிக்குத் தலைமை தாங்கும் ஒருவர் மக்களுடன் நெருக்கமானவராக மட்டும் இருப்பது போதாது, பல்வேறு பண்புகளுடன் இருக்கும் அரசியல் தரப்புக்களுடன் பேரங்களைச் செய்பவராகவும் அரசியல் விவகாரங்களை கையாளக் கூடியவராகவும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும். 

தமது இரு அமைச்சர்கள் தொடர்பில் விக்னேஸ்வரன் எடுத்திருக்கும் முடிவென்பது மக்கள் மத்தியில் அவருக்கு அபிமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அவரளவில், அவரது மதிப்பீட்டின் அடிப்படையில் அந்த அமைச்சர்களின் அரசியல் இருப்பென்பது மனதளவில் அவருக்கு வலிமையைக் கொடுப்பதாகவே இருந்தது.   இந்த நெருக்கடியான நிலையில் முதலமைச்சரின் பக்கத்திலேயே அதிகளவு நியாயம் இருப்பதாகப்படுகிறது. அவரின் பக்கமே நாம் குரல் கொடுக்கவேண்டும், அதேவேளை அவரது குரலை செயலுக்குப்போகும் ஒன்றாக மாற்றவேண்டும். வெறுமனே உரையாற்றும் ஒருவராகவே அவர் தனது காலத்தைக் கழித்துவிட நாம் அனுமதிக்கமுடியாது. ஆனால் அரசியல் விருப்பு மிக்க இளைஞர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டிய காலம். 



தமிழ் மக்களுக்கு ஜனநாயக அரசியலென்பது  நீண்ட இடைவெளிக்குப் பின் நடைமுறையிலிருப்பது, அதன் ஜனநாயகப் பண்புகளை பயிற்சி செய்வதற்கு 
சிறிது காலமெடுக்கும், இந்தக் காலத்தில் நிகழக் கூடிய மாற்றங்கள் என்பன கூடிய பட்ஷம் ஜனநாயக முறைப்பட்டதாகவும்  அரசியலை தேர்தலைத் தாண்டி விளங்கிக் கொள்ள வேண்டிய பங்கேற்க கூடிய ஒன்றாக மாற்ற வேண்டும். இந்த ஏழு வருடங்களில் அதிக பட்ஷம் உணர்வெழுச்சியான விடயங்களுக்காகவே இளைஞர்களும் மக்களும் தெருவிலிறங்கியிருக்கிறார்கள், போராடியிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் விளைவுகளில் அந்த வகையான போராட்டங்களே முதலில் தோன்றும். ஆனால்  அது வளர்ச்சிப்போக்கைக் கொண்டிருக்க வேண்டும். உணர்வெழுச்சியிலிருந்து அரசியலை ஒரு அறிவுபூர்வமான துறையாகக் கையாளப் பழக வேண்டும். இப்பொழுது இரண்டு கட்டுரைகளிலும் நாம் விவாதித்த ஆளுமைகளின் தன்மைகளில் போதாமை உள்ளது. விமர்சனங்கள் உண்டு. ஆனால் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நாம் இந்தப் பக்கத்தில் நிற்க வேண்டுமென்று தீர்மானம் செய்ய வேண்டும். மேலும் இங்குள்ள சிவில் சமூகங்களும் கல்வி நிலையங்களும் சுய சார்புள்ள பிரச்சினைகளோடு பொது அரசியலில் உள்ள விடயங்களை உள்வாங்கி மக்களை அரசியல் அறிவுள்ள தொகுதியாக மாற்ற வேண்டும். அரசியல் உணர்வுள்ள தொகுப்பாக இருக்கின்ற தமிழ்மக்களை அரசியல் அறிவுள்ள தொகுதியாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் இளைஞர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு புத்திஜீவிகளுக்கும் உள்ள பொறுப்பு. அரசியலை ஒரு மக்கள் தொகுதியின் அறிவாக மாற்றுவதற்கு பெரும் உழைப்புத் தேவை. பரந்துபட்ட வாசிப்புள்ள ஒரு சமூகமாக நாம் மாற்றம் பெற வேண்டும். அன்றாட பத்திரிக்கைச் செய்திகளை வைத்து கணிக்கும் அரசியலைத்  தாண்டி அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

அரசியலிலும் சமூகத்திலும் அக்கறையுள்ளவர்கள் இனியும் அரசியலை ஓட்டுப்போடுவதுடன் மாத்திரம் நகர்ந்து செல்லும் ஒரு சடங்காக தொடர முடியாது. குறிப்பாக இது தமிழ் இளைஞர்கள் அரசியல் பழகவேண்டிய காலம்.

கிரிஷாந்

நன்றி - Quick news tamil 

சினிமாவுக்கோர் இயக்கம்





ஒரு மக்கள் இயக்கமென்பது மக்களிடமிருந்து எழுச்சி பெற்று வருவது. 'Chikpo Movement ' என்ற ஆவணப்படத்தை நிகழ் படத்தை எப்படி ஒரு இயக்கமாக மாற்றுவது என்பது தொடர்பான கலந்துரையாடலின் முதலாவது உரையாடல் பகுதியாகப் பார்த்திருந்தோம். அந்த ஆவணப்படம்,  ஒரு மலைப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் தமது காடுகளுக்கு எதிராக வந்த சக்திகளிடமிருந்து எப்படி தமது காடுகளைக் காத்தனர். அதனைக் காப்பதற்கு அவர்கள் எப்படி ஒரு குழுவாகத் திரண்டனர். பின்னர் எப்படி ஒரு இயக்கமாக மாறி அழிந்த காடுகளை மீள உருவாக்கினார் என்பது பற்றியது.

முதலில் தனிமனிதர்களின் சிந்தனைகளிலிருந்து உருப்பெற்று வரும் கருத்துக்கள் ஒத்த அலைவரிசையைக் கொண்ட குழுவாகத் திரளும், பின் அது அதற்கான வரலாற்றுப் புறக்காரணிகள் உருவாகும் போது இயக்கமாக உருவெடுக்கும். இதனை ஒரு எளிமைப்படுத்திய விளக்கமாகக் கொண்டால், எதற்காக ஒரு சினிமா இயக்கம் தேவைப்படுகிறது, அதற்கான புறக்காரணிகள் என்ன என்பது தொடர்பில் நாம் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு கால கட்டத்தையும் ஒவ்வொரு வகையான சிந்தனைப் போக்குகள் ஆதிக்கம் செலுத்தும். அந்த சிந்தனைப் போக்குகளை பரவலாக்கும் கருத்தியல் ஊடகங்களும் அதனை பிரச்சாரம் செய்யும். கிராம்ஷியின்  'மேலாண்மைக்' கருத்தியல், அதாவது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்களை உருவாக்கும் அமைப்புகள் பற்றியும் அது எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றியும் அறியும் ஓர் அறிவு சார் விளக்கம் இந்த இடத்தில் முக்கியமானது. 



நமது கால கட்டத்தின் பெரும்பான்மை மக்களின்  பண்பாட்டு, கலாசார, வாழ்வியலை தீர்மானிக்கும் தீர்மானகரமான சக்தியாக 'சினிமா' என்ற கலைவடிவம் உருவாகி நீண்ட காலமாகிறது. நமது அன்றாட வாழ்வில் சினிமா இல்லாத நாளே கிடையாது. சினிமாவிலிருந்து வசனங்களை புழக்கத்திற்குள் கொண்டுவருகிறோம், ஆடை முதல் நகைச்சுவை வரை நாம் சினிமாவின் தலைமுறை. சினிமா நமது கலாசார வாழ்வை தீர்மானிக்குமொரு சக்தி. மிக நேரடியான ஊடகம். ஆதிக்க கருத்துக்களை அல்லது சமூக ஆதிக்கத்தை உருவாக்கும் ஒரு மேலாண்மை ஊடகமாக சினிமா கடந்த நூறு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 

பெரும்பான்மை மனநிலையில் தாக்கத்தைச் செலுத்தும்  சினிமாவை அதன் பண்பாட்டு கலாசார ஆதிக்க கருத்தியல்களை எதிர்க்கும் விதமாக விமர்சனங்கள் அறிவு சார் தளத்தில் உரையாடப்படுகின்ற அதேவேளை ரசனை சார் மாற்றங்கள் பெரும்பான்மை மனநிலையில் ஏற்படாதவிடத்து இந்த விமர்சனங்களால் விளையும் பயன்மதிப்பும் குறையும். ஆகவே விமர்சன மரபின் தொடர்ச்சியின் அவசியத்தை உணரும் அதே வேளை ரசனை மாற்றங்கள் மற்றும் வித்தியாசமான சினிமா அனுபவங்களை பரவலாக்கும் தேவையும் முக்கியமானது. உலகம் முழுவதும் மாற்றுச் சினிமாக்களையும், மைய நீரோட்டத்திலும் கூட சில நல்ல படங்களையும் எடுக்கும் வழக்கம் உருவாகியிருக்கிறது. ஆனால் அவை வெகுஜனத்திற்கு அதிகம் மார்க்கெட்டிங் செய்யப்படாதவையாகவும் விற்பனையாகாத பண்டமாகவும் உள்ளது. ஆகவே வித்தியாசமான சிந்தனைப் போக்குகளை அனுபவங்களை முன்வைக்கும் சினிமாக்களை கிராமம் கிராமமாக நகரம் நகரமாக நாம் கொண்டு திரிந்து அறிமுகப்படுத்த வேண்டியது நமது கால கட்டத்திற்கு மிக மிக அவசியமானது. வேறு எந்த கலை வடிவங்களையும் விட மக்களுக்கு மிக நெருக்கமானதொன்றாக ஆகிவிட்டிருக்கும் சினிமாவிற்குள்ளிருந்து உருவாகும் மாற்றுக் குரல்களை, ஆதிக்க கருத்தியல்களுக்கு எதிரான சிந்தனைப்பள்ளிகளை நாம் அடையாளம் காண்பதும் அதனை நம் சமூகத்துடன் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதும் உரையாடுவதும் தான் 'நல்ல சினிமாவை' வெகுஜனமயப்படுத்தும் அதே வேளை நமது கால கட்டத்தில் நாம் சமூகத்துடன் நெருங்குவதற்கிருக்கும் மிகச் சிறந்த வழியும்.    

இந்தப் பின்னணியில், நிகழ் படத்தின் இரண்டு கள அனுபவங்களை இங்கே விபரிக்கிறேன். 


திரையிடல் - 01 

பளை மைதானத்தில் இறங்கி எல்லோரும் அந்த மைதானத்திற்குச் சென்றோம். ஐம்பது பேருக்கு மேல் கலந்து கொண்ட அந்த முதலாவது திரையிடல் வழங்கிய அனுபவங்கள் கீழே.

முழுவதும் விளையாட்டு சார்ந்த இளைஞர்கள். "GOAl " என்ற காற்பந்து தொடர்பான திரைப்படமே தெரிவு செய்திருந்தோம். தமிழ் மொழியாக்கத்தில் தேர்வு செய்ய வேண்டிய ஒரு தேவையும் இருந்தது. முதலாவதாக பொதுவெளிக்கு நகரும் போது மொழி அவர்களை திரைப்படத்தை விட்டு அந்நியமாக்கி விடக் கூடாதென்று கருதியிருந்தோம். திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது சுவாரசியமான உரையாடல்களை இளைஞர்கள் நிகழ்த்தியபடியிருந்தனர். திரைப்படமொன்றின் கதாபாத்திரங்களை மனிதர்கள் எப்படி தங்களுக்குத் தெரிந்தவராகவோ தாங்களாகவோ உணர்ந்து அதனை ஒரு அனுபவமாக மாற்றுகின்றனர் என்பதை பார்த்தோம். "என்ன அண்ணை படத்தில பாட்டு ஒண்டையும் காணேல்ல " என்றொரு குரலும் முத்தக் காட்சிகள் வரும்போது பள்ளிக்கூட டூர் பஸ் மாதிரி கூக்காட்டி கத்தவும் செய்தார்கள். எல்லாமே அவர்கள் காட்சியின் மீது நிகழ்த்திய  பார்வைகளாகவே புரிந்து கொள்கிறோம்.

படம் திரையிடலின் பின் ஆரம்ப உரையை சன்சிகன் நிகழ்த்தினார். அதில் நிகழ் படம் என்றால் என்ன என்பது பற்றியும் அதன் இயக்கத்தில் உள்ள நண்பர்களையும் அறிமுகப்படுத்தினார். அதன் பின் நான் உரையாடலுக்கான நேரத்தை கையாளும் பொறுப்பை எடுத்துக் கொண்டேன். நானும் சன்சிக்கும் மாறி மாறி கேள்விகளுக்கு பதிலளித்தோம். சில அடிப்படையான கேள்விகளைக் கேட்டோம். 

" இந்த மாதிரி திரையிடல்களை நீங்கள் விரும்புகிறீர்களா"

இரண்டு மூன்று பேர் சத்தமாக ஓம் என்றார்கள்.

" வேறு என்ன வகையான படங்களை பார்க்க விரும்புகிறீர்கள்?" 

"இலங்கையில் வெளியிடப்படும்  தமிழ் குறும்படங்களை பார்க்க விரும்புகிறோம்" 

"இனி எப்பொழுது படம் போட்டால் பார்க்க வருவீர்கள்?" 

"ஒவ்வொரு நாள் போட்டாலும் வருவோம்" என்று சிரிப்பும் கூச்சலும்.

"அடுத்த மாதம் ஒரு நாள் படம் போடுவம், ஆனா அதுக்கும் அம்பது பேர் தான் வருவியளோ, அல்லது வீட்டிலையும் வேற பெடியளிட்டையும் சொல்லுவியளோ?" என்றோம்.

" கட்டாயம் எல்லோருக்கும் சொல்லுவோம்" என்றார்கள்.

பின்னர் குறும்படங்கள் சில போடும் படி கேட்டார்கள். மதிசுதாவின் " மிச்சக் காசு", " துலைக்கோ போறியள்" ஆகிய படங்களைப் போட்டோம். மிகவும் ரசித்துப் பார்த்தார்கள். அதனோடு ஓட்டுவதற்கு அவர்களால் முடியுமாயிருந்தது. கலகலப்பும் நட்புமாய் முதலாவது திரையிடல் முடிந்தது.



   

திரையிடல் - 02 

பருத்தித்துறை, தும்பளை மேற்கு சன சமூக நிலையத்தில் ஏற்கனவே நான்கு படங்களை திரையிட்டு உரையாடல்களை அங்குள்ள நண்பர்கள் நிகழ்த்திருக்கின்றனர். நாம் ஐந்து சுந்தரிகள் என்ற மலையாள திரைப்படத்தை திரையிட்டிருந்தோம். இங்கு பெண்களும் சிறுவர்களும் இளைஞர்களும் வயோதிபர்களுமென்று கலவையான பார்வையாளர்கள் இருபத்தைந்து பேர் வந்திருந்தனர்.

ஐந்து கதைகளாகப் பிரிந்த படத்தின் மூன்றாவது பகுதி சென்று கொண்டிருக்கும் போதே சில இளைஞர்கள் இறங்கி சென்று விட்டனர். இரவு ஏழு மணிக்கு படம் ஆரம்பித்திருந்தது ஒன்பது மணிக்குப் பின் குடும்பங்களாக வந்திருந்தவர்கள் செல்ல ஆரம்பித்தார்கள். அதன் பின் இறுதியில் ஏழு பேரே எஞ்சியது. 

அதன் பின்னர், ஏன் இந்த நிலைமை என்பதை பற்றி கலந்துரையாடினோம். அந்த இளைஞர்களிடம் "ஏன் படம் பிடிக்கவில்லையா ?" என்று கேட்டோம். "மலையாளத் தமிழ் விளங்கேல்ல அண்ணை" என்றார்கள். 'தமிழ்ப்படம் போடுங்கோ பார்க்க வாறம்"என்றார்கள். 

முதலாவது பிரச்சினையாக மொழியிருக்கிறது. ஆரம்பத்தில் பொது வெளிக்கு நகரும்போது பலவகையான பார்வையாளர்களும் உள்ள அரங்குகளில் இந்தப் பிரச்சினை தீவிரமாக இருக்கும். அதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டுமென்று கதைத்துக் கொண்டோம். மொழியில் உள்ள பிரச்சினையால் அவர்கள் மாற்றுச் சினிமாவை விட்டு விலத்தி ஓடிவிடக் கூடாது. முதலில் தமிழில் வந்த நல்ல சினிமாக்களையும், தமிழ் மொழிமாற்றம் செய்து  வந்த சினிமாக்களையும் இந்த வகையான பார்வையாளர்களுக்கு பரீட்சயபடுத்த வேண்டும் என்று கதைத்தோம். ஆவணப்படங்களைதிரையிடுவதும் முக்கியமென்று கருதினோம். காரணம் இதே அரங்கில் ' சம்பூர் அனல் மின்நிலையம்  தொடர்பில் எடுக்கப்பட்ட "மின்பொறிக்குள் சம்பூர் " என்ற ஆவணப்படம் நல்லதொரு உரையாடலுக்கு வழிவகுத்ததென்று நண்பர்கள் சொன்னார்கள்.

மேலும் வேற்று மொழிப் படமொன்றை திரையிடும் போது, திரையிடலுக்கு முன் கதையைப் பற்றியும் அதன் இயல்பை பற்றியும் கொஞ்சம் கதைத்திருந்தால் அவர்களால் இன்னும் நெருக்கமாக விளங்கி கொண்டிருக்க முடியும். அல்லது ஒவ்வொரு பகுதியும் முடியும் பொழுது  நிறுத்தி நிறுத்தி உரையாடியிருந்தால் அவர்களால் அந்த திரையிடலில் குழப்பத்தை உணர்ந்திருக்க மாட்டார்கள் என்றும் சில நண்பர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

தொடர்ச்சியாக இரண்டு திரையிடல்களிலும் இருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளம் விடயங்களிருந்தன. முதலாவது திரையிடல் ஒரேவகையான விருப்புள்ள ஒரேவயதுமட்ட ஒரே பால்நிலையைச் சேர்ந்தவர்களின்  திரையிடல் எப்படி இருந்தது என்பதும். பல்வேறு வயத்தைச் சேர்ந்தவர்களதும் வித்தியாசமான  விருப்பங்களைக் கொண்டவர்களையும் ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கிய திரையிடல் எப்படியான வித்தியாசங்களை அனுபவங்களாக வழங்கியது என்பதை இரண்டாவது திரையிடலிலும் உணர்ந்தோம்.

சினிமா இயக்கங்களுடன் இணைந்து ஒரு கால கட்டத்தின் ரசனை மாற்றமும் நிகழும், பண்பு மாற்றம் பெறும் சினிமாவை உருவாக்குவதற்கான களங்களும் விரியும். சமூகத்திற்குள்ளிருந்து சினிமாவை உரையாட ஆரம்பித்து பின் அதன் கருத்தியல்களை விவாதிக்கும் தரப்பு எழுச்சி பெறும். இது சார்ந்த செயல்வாதங்கள் நமது காலத்தைப் பொறுத்த வரை பெரும் மாற்றங்களை உருவாக்கக் கூடியது. பல்வேறு சினிமா வட்டங்களும் தொடர்ச்சியான திரையிடல்களும் மட்டும் தான் இதனை சாத்தியமாக்க முடியும்.

உதாரணத்திற்கு, இன்று நாம் மலையாள சினிமாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஆகவே மலையாள சினிமாவின் இன்றைய உருவாக்கத்திற்குப் பின் உள்ள சமூக காரணிகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது வரலாற்றுக்கு காரணிகள். அங்குள்ள கம்யூனிச பாரம்பரியம் அதனூடாக உருவாகி வந்த செயல்வாதம், பின்னர் செழுமை வாய்ந்த இலக்கியம். அதன் பின்னர் பலரும் இணைந்து மேற்கொண்ட சினிமா இயக்கங்கள். இன்றுள்ள மாற்றுச் சினிமாவுக்கான கதவுகளை எல்லாமும் சேர்ந்து தான் உருவாக்கின. அதனால் தான் இன்று அந்தப் படங்களை பார்ப்பதற்கு மக்கள் வருகின்றனர், ரசனை மாற்றம் ஒரு சமூகத்தின் சிந்தனைப் போக்கில் நிகழும் மாற்றம். அதன் ஆன்மாவில் நிகழும் மலர்தல். 

கிரிஷாந்

நன்றி - கரவொலி