சனி, 11 பிப்ரவரி, 2017

ஆமிக்காரனே! எயார் போஸெ! காணிய விட்டிட்டு வெளிய போவன்ரா





கேப்பாபுலவில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் பல வகையில் முக்கியமானது. ஈழத் தமிழர் வரலாற்றில் நீண்ட காலத்தின் பின்  தொடர்ந்து ஜனநாயக வழிப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலமிது.

இவற்றை சரியான வழியில் நகர்த்திச் செல்ல வேண்டியதும் ஆதரவளிக்க வேண்டியதும் நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

கேப்பாபுலவு மக்கள் இந்த போராட்டத்தின் போது காட்டும் உறுதி மெய்ச்சத் தக்கது. அங்கு குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்று வீதியில் படுத்து பனியில் நனைத்து வெயிலில் வறண்டு  இராணுவத்தின் அச்சுறுத்தல்களை புறந்தள்ளி இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளனர்.

பலர் இந்தப் போராட்டத்திற்கு உரிமை கோரவும் இதனூடாக தமது இருப்பினை உறுதிப் படுத்தவும் அரசியல் லாபம் தேடியும் அந்தக் கொட்டகைக்கு வந்து செல்கிறார்கள்.ஆனால் எந்த அரசியல் வாதியினதும் குரலிலும் சுரத்தில்லை,

அந்தப் பெண்களின் குரலில் ஒரு உக்கிரமிருக்கிறது. கண்ணியமிருக்கிறது. போராட்டத்தின் குணமிருக்கிறது. இப்பொழுது அங்கு நடந்த சில சம்பவங்களினூடாக போராட்டத்தின் நிலைமையையும் அதன் பல்பரிமாணத் தன்மையையும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

சம்பவம் 1

கோப்பாபுலவிற்கு முதலமைச்சர் மற்றும் இதர அமைச்சர்கள் உட்பட ஒரு அணி வந்து மக்களுக்கு பேசுவோம் என்று கதைத்துக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதிக்கு இதனைத் தெரிவிப்பேன் என்று சுதந்திர தினத்தை புறக்கணித்து இங்கு வந்திருக்கிறேன் என்றும் அவர் சொன்னார்.

பின்னர் போகும் போது காரில் இருந்தபடி மக்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது சிவாஜிலிங்கம் அவர்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்று சொன்னதாக சிறு சலசலப்பு ஏற்பட போராட்டக்காரர்கள் கைகளை மேலே தட்டி பெருத்த சிரிப்புகளை எறிந்து போராட்டத்தைக் கைவிடட்டாம் என்று சொல்லி நக்கலடித்தனர். போராடடத்தை  விட முடியாதென்பது தான் அவர்கள் செய்த அந்த சம்பவத்தின் விளக்கம்.

சம்பவம் 2

"இரவு முழுக்க இராணுவம் பீல் பைக்கில வாசல் மட்டும் வந்து வந்து போகுது, எங்கட ஆம்பிளையள் ரோட்டில தான் படுக்கிறவை, நாங்கள் கீழ இறங்கி தாழ் நிலத்தில படுக்கிறது. இரவொரு பெரிய வாகனமொன்று வந்தது, ஒரு பன்னிரண்டு ஒரு மணியிருக்கும் வந்து எங்களை இடிக்குமாப் போல வெட்டிச்சுது. நாங்கள் துலைஞ்சுதெண்டு தான் நினைச்சம். பிறகு விடிய விடிய முழிச்சிருந்தம்"

-ஒரு பெண் சொன்னது -

சம்பவம் 3    

சுதந்திர தினத்தின் காலையில் சின்னப்  பெடியள் பிள்ளையள்  கலக்கி விட்டாங்கள் அண்ணை. கறுப்புத் துண்டு கட்டி கறுப்புக் கொடியைக் கட்டி ஒரு ஆர்ப்பாட்டமொன்று செய்தாங்கள். அப்பிடி இருந்துச்சுது.

- முதல் நாளிலிருந்து அந்த மக்களோடு நிற்குமொரு இளம் ஊடகவியலாளர் சொன்னது -

இப்படி ஒவ்வொரு நாளும் பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. யாழ் பல்கலைக் கழக முகாமைத்துவ பீடமும் சமூக நீதிக்கான வெகுஜன இயக்கமும்  இன்னும் பல அரசியல் கட்சிகளும் இளைஞர்களும் ஆதரவு தெரிவித்து தினமும் வந்து செல்கின்றனர்.



இப்பொழுது சில இளைஞர்களினதும் சமூக நலன் விரும்பிகளினதும் முன்னெடுப்பில் போராட்டத்தில் பங்குகொண்டுள்ள  மாணவர்களுக்கு மாலை வகுப்பினை எடுக்கின்றனர். இது போன்ற முன்னெடுப்புகள் போராட்டத்தை சரியான வழியில் கொண்டு செல்ல உதவும். அவர்களுக்கு பாராட்டுக்கள்.

மேலும் பல்கலைக் கழகமும் சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள், இளைஞர் அமைப்புகளும் இதற்கு சிலரால் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் சாயத்தை குறைக்க முடியும். மாற்ற முடியும். முடிந்தளவிலான இளைஞர் பங்களிப்பு போராட்டத்திற்கு புதிய வடிவமும் ஊக்கமும்  கொடுக்கும்.

மக்களின் உறுதியையும் நம்பிக்கையையும் மேலே சொன்ன சம்பவங்களின் மூலம் ஓரளவு புரிந்து கொள்ள முடியும் நேரில் சென்றால் அதன் உக்கிரம் விளங்கும்.

கேப்பாபுலவு - போராட்டத்தின் மண்.

இது போன்ற ஜனநாயக போராட்ட வடிவங்களை மக்கள் மேற்கொள்ளும் போது அடையாளமாக கலந்து கொண்டுவிட்டு அங்கிருந்து விலகிச் செல்வது அரசியல்வாதிகளுக்கோ அல்லது மாணவர்களுக்கோ அல்லது இளைஞர்களுக்கோ பொருத்தமானதில்லை.

மக்களின் இந்த அரசியல் மாற்றத்திலிருந்தே அடுத்த தலைமைகள் உருவாகும். அதனை சரியாக அடையாளங் காணுவதும் வழிப்படுத்துவதும் அனைவரினதும் கடமை.

ஆகவே மக்களோடு நின்று மக்களுக்கு நிற்க வேண்டிய பொறுப்பை மேற் சொன்ன அனைவரும் எடுக்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மக்களை இரவும் பகலும் அரணாய் நின்று காக்க வேண்டும். அங்குள்ள மக்களின் ஜீவசக்தியாய் நிற்க வேண்டும்.

இந்த அரசியல் மாற்றத்திலிருந்து அரசியல்வாதிகள் மக்களைப் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களோடு நிற்க வேண்டும், அவர்களுக்காய் குரல் கொடுக்க வேண்டும். அதனை உணர்த்தியதே கேப்பாபுலவு மக்களின் பெருவெற்றி. அவர்கள் எந்தக் காணிகளுக்காகா போராடுகிறார்களோ அதே நிலங்கள் மீளக் கிடைக்கும் போது போராட்டங்கள் மீதான மதிப்பு மீண்டும் எழுகை பெறும். அதற்காக கட்சி, வர்க்க பேதமின்றி ஒன்றாய் எழட்டும் நம் குரல்கள். இனி நாமும் கேப்பாபுலவுப் பிஞ்சுகள் பாடுவதைப் போல  சொல்வோம் “ ஆமிக்காரனே! எயார் போஸெ! காணிய விட்டிட்டு வெளிய போவன்ரா”

கிரிஷாந்த்

நன்றி - புதுவிதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக